ஆமா நான் பிச்சைதான் எடுக்கறேன்.. இதில் எந்த வெட்கமும் இல்லை.. நெகிழ வைக்கும் அறந்தாங்கி நிஷா
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது என் கடமை என்று நிஷா தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: "ஆமா... நான் பிச்சைதான் எடுக்கிறேன்" என்று அறந்தாங்கி நிஷா சொல்லி உள்ளார்.
அடுத்தடுத்து கலக்குகிறார் கலக்க போவது யாரு புகழ் அறந்தாங்கி நிஷா! இவர் 2 தினங்களுக்கு முன் ஒரு வீடியோவை பேசி வெளியிட்டிருந்தார். திருச்சி மாவட்ட மக்களுக்காகவே அந்த வீடியோவை வெளியிட்டிருந்தார்.
உதவும் நல்லுள்ளங்கள், காசு, பணம் தர வேண்டாம்.. பாதிக்கப்பட்ட மக்கள் சாப்பிடுவதற்கு உணவும், இருளில் அவஸ்தை பட்டு வருபவர்களுக்கு மெழுகுவர்த்தியும், கொசுக்கடியிலிருந்து தப்பிக்க கொசுவர்த்தியும்தான் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

புதுப்பள்ளி கிராமம்
இதையடுத்து, தற்போது இன்னொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், "நாகை மாவட்டம் புதுப்பள்ளி என்கிற கிராமத்தில் படுக்க பாய் கூட இல்லாமல், மழையில் நனைந்தபடி உள்ளனர் என்று கூறியுள்ளார். நானும் களத்தில்தான் இறங்கி உள்ளேன். ஆனால் என்னால் அந்த கிராமத்துக்கு உடனே போக முடியவில்லை, அதனால் தார்ப்பாய் இல்லாமல் தவித்து வரும் அந்த கிராம மக்களுக்கு போர்த்தி கொள்ள உங்களிடம் பழைய தார்பாய் இருந்தால் தாங்கள் என்றும், பழைய ஃபிளக்ஸ் இருந்தால்கூட பரவாயில்லை.

தார்பாய் வேணும்
அவர்களிடம் கொண்டு போய் எப்படியாவது கொடுத்து விடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். பொருட்களை வழிமறிக்கிறாங்கன்னு சொன்னாங்க.. என்ன கஷ்டம் வந்தாலும் எப்படியாவது அந்த கிராம மக்களுக்கு உதவி செஞ்சிட்டு வந்திடுங்க. தார்பாயுடன், குடிநீர், உணவு, எதுவானாலும் கொடுத்துவிட்டு வாருங்கள்" என நிஷா கேட்டுக்கொண்டுள்ளார்.
எனக்கு வெட்கம் இல்லை
இதேபோல மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், "நான் நிவாரண உதவி கேட்கும் வீடியோவை பார்த்து ஒரு தம்பி, "என்னக்கா பிச்சை எடுக்கிறீங்களா?" என்று கேட்டிருக்கிறார். அவருக்கு மட்டுமில்லை.. அவர் போல நினைக்கிற நிறைய தம்பிகளுக்கு சொல்லிக்கறேன், "ஆமா.. நான் பிச்சைதான் எடுக்கிறேன்.. இதில எனக்கு எந்த வெட்கமும் இல்லை... ஏன்னா, நமக்கு இதுவரைக்கும் அரிசி, பருப்புன்னு பிச்சை போட்டவங்களுக்குத்தான் இப்போ நான் பிச்சை எடுக்கறேன்.

அவங்க போட்ட பிச்சை
இதுல எனக்கு எந்த தப்பும் இருக்கிறதா தெரியல. பட்டிமன்றத்துல நான் பேச ஆரம்பிச்சப்போ என்னை தூக்கி விட்டதே இதுபோன்ற கிராம மக்கள்தான். என்னை இதுவரைக்கும் வாழ வெச்சிட்டு இருந்ததே அவங்க எனக்கு அன்னைக்கு தந்த ஆதரவுதான். அவங்க போட்ட பிச்சையாலதான் என் குடும்பமே இன்னைக்கு வாழுது. அதனாலதான் என் குடும்பத்தை விட்டுட்டு இப்படி நான் அங்கெல்லாம் ஓடி உதவி பண்ணிட்டு வரேன். இது என் கடமை.

என் குழந்தை
என் குழந்தைகூட இந்த உதவியில பங்கெடுத்து என்கூட வந்துட்டு இருக்கு. அதனால தயவு செய்து வார்த்தைகளை விடாதீங்க. முடிஞ்சா உதவி பண்ணுங்க. இல்லேன்னா ஒதுங்கிடுங்க. இப்படி யாரையும் கஷ்டப்படுத்தாதீங்க" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications