செங்கோட்டையன் Vs இபிஎஸ் மோதலுக்கு இதுதான் காரணம்.. உடைத்துப் பேசிய வேல்முருகன்
சென்னை: செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கான மோதல் போக்கு குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கட்சி இயங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி கோவை அன்னூரில் அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக விவசாயிகள் சங்கம் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எடப்பாடி பழனிச்சாமிக்கான நிகழ்ச்சியில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம் பெறவில்லை என்றும், அதனால் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்ததாகவும் செங்கோட்டையன் விளக்கமளித்திருந்தார். அதேபோல, அதிமுக நிகழ்ச்சிகள், செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி என்ற வார்த்தையையே செங்கோட்டையன் புறக்கணித்து வந்தார்.
இதைத்தொர்டந்து எடப்பாடி பழனிச்சாமிக்கும், செங்கோட்டையனுக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன. இந்த சர்ச்சைகளுக்கு இடையே சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா 6ம் ஆண்டு விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக தலைவர் செங்கோட்டையன் பங்கேற்றனர்.
இந்த சர்ச்சைகளுக்கு கிரீடம் சூட்டுவது போல விழாவில் பேசிய செங்கோட்டையன், பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி பேசி உள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதனால், செங்கோட்டையன் பாஜகவுக்கு செல்லப் போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- எம்ஜிஆர், ஜெயலலிதாவால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றம் என்கிற இயக்கம் கட்டி எழுப்பப்பட்டது. ஒரு குடையின் கீழ், ஒரு தலைமையின் கீழ் இயங்கி வந்தது அந்த இயக்கம். தற்போது அந்த இயக்கம் பல்வேறு குழுக்களாகப் பிரிந்துள்ளது. தற்போதுகூட செங்கோட்டையன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எடப்பாடியுடன் இணைந்து இயங்காமல் தணித்து செயல்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஒவ்வொரு காலகட்டங்களிலும் தமிழ்நாட்டில் இருக்கிற மிகச்சிறந்த ஆளுமைகளை பாஜக தன் கட்சியில் இணைப்பதற்கு முயற்சி செய்யும். அப்படி இல்லையென்றால் அரசியல் கட்சிகள் தங்கள் இழுப்புக்கு வரவில்லை என்றால் வருமான வரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற துறைகளை அனுப்பி அந்த கட்சிகளை இரண்டு, மூன்றாக உடைக்கும் வேலையைச் செய்யும்.
அதுபோன்று தான் இன்று பாரதிய ஜனதா கட்சி இந்தியா முழுவதும் செய்து வருகிறது. பாஜக தமிழ்நாட்டில் என்ன செய்யப் போகிறது என்பது இனிவரும் காலங்களில் தான் தெரியவரும். தற்போது மோடியை செங்கோட்டையன் பாராட்டியிருப்பதை வைத்து மட்டும் எதையும் கணித்துச் சொல்ல முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications