தவெக விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை! ஆனால்..! விசிக திருமாவளவன்
சென்னை: தவெக தலைவர் விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை. அவரை கைது செய்ய வேண்டும் என்றும் நாங்கள் கூறவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் புகைப்படங்களுக்கு சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை. அவரை கைது செய்ய வேண்டும் எனவும் நாங்கள் வலியுறுத்தவில்லை.
நடந்த சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும் என்றுதான் விமர்சனம் செய்து வருகிறோம். தமிழக அரசின் செயல்பாடுகள் கரூர் சம்பவத்தில் திருப்தியாக இருக்கிறது. பாஜக, அதன் கூட்டணி கட்சிகள்தான் இதில் அரசியல் செய்கின்றன.
விஜய்யை கையில் எடுக்க பாஜக பகீரத முயற்சிகளை எடுக்கிறது. சதிகார, சூழ்ச்சிகார அரசியல் சக்திகளிடம் சிக்கினால் அவர் இது போன்ற பல நெருக்கடிகளை சந்திக்க நேரும். விஜய் சுதந்திரமாக சிந்தித்து செயல்பட வேண்டுமென்பதுதான் என் வேண்டுகோள் ஆகும்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீதான காலணி தாக்குதல் முயற்சியை விசிக மிகவும் வன்மையாக கண்டிக்கிறது. உச்சநீதிமன்றத்திலும் சனாதன சக்திகளின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இந்த நிகழ்வு சான்றாகும். ராகேஷ் கிஷோரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் நடந்த பிரஸ்மீட்டில் திருமாவளவன் கூறுகையில், விஜய் மீது எங்களுக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி ஏதும் இல்லை. யாருக்கும் இதில் கிரிமினல் நோக்கம் இல்லை. விஜய்க்கோ, மற்றவர்களுக்கோ இப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டும், இதில் பலர் உயிரிழக்க வேண்டும் என திட்டமிட்டு செய்திருக்க வாய்ப்பு இல்லை என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.
இதில் உள்நோக்கம் இல்லை என்பது மக்கள் உணர்ந்திருக்கும் உண்மை. இந்த சம்பவத்தில் புலனாய்வில் என்ன வரும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இதனை பொத்தாம் பொதுவாக மேலோட்டமாக பார்த்தால் நெரிசல் சாவு. இதற்கு விஜய் தார்மீக பொறுப்பு ஏற்று இருக்க வேண்டும் என்பது தான் பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது.
அரசின் மீதோ முதல்வர் மீதோ குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது. தன்னுடைய கட்சியினர் தங்களை காண வந்த ஒரு சூழலில், காலதாமதத்தாலும், ஒரே இடத்தில் அதிகமான மக்கள் கூடியிருந்ததாலும் ஏற்பட்ட விளைவு என்பதை விஜய் மற்றும் மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் எங்களை போன்றவரின் கருத்து. கரூரில் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு விசிக சார்பில் தலா ரூ.50 ஆயிரம் வழங்கி உள்ளோம். பாஜவினர் விஜயை தங்களது கூட்டணிக்குள் இழுக்க முயற்சிக்கிறார்கள் என்று நான் கருதவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications