‛‛நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு விருது’’.. பெருமைப்படுத்திய திருமா.. ‛பாசிசத்துக்கு எதிரானவர்’ என புகழாரம்
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விசிக விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நடந்த விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு அம்பேத்கர் சுடர் விருதை தொல் திருமாவளவன் வழங்கினார். பிரகாஷ் ராஜ் தவிர இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், பேராயர் எஸ்றா சற்குணம், வழக்கறிஞர் அருள் மொழி உள்பட பலருக்கு விருது வழங்கப்பட்டது.
தொல் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்பட்டு வருகிறது. தமிழக அரசியலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பயணித்து வருகிறது.

அதேபோல் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இயங்கி வருகிறது. அங்கு கட்சியின் கட்டமைப்புகளை பலப்படுத்தி தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை திருமாவளவன் மேற்கொண்டு வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விசிக விருது வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது. சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறப்பாக பங்காற்றியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு தொடங்கிய விருது வழங்கும் விழா தொடர்ந்து நடந்து வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தாரமையா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் து.ராஜா, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் உள்ளிட்ட பலருக்கு விசிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், நடப்பாண்டுக்கான விசிக விருதுகள் கடந்த மாதம் 29ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அனைவருக்கும் விருது வழங்கப்பட்டது. சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்த விழாவில் தொல் திருமாவளவன் விருது வழங்கினார். அதன்படி நடிகர் பிரகாஷ்ராஜ்-க்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛மக்களின் உரிமைகளுக்காகவும், மதவாத பாசிசத்திற்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுக்ம் திரைக் கலைஞர் பிரகாஷ் ராஜ்க்கு அம்பேத்கர் விருது வழங்குவதில் விடுதலை சிறுத்தைகள் கடசி பெருமை கொள்கிறது '' என தெரிவித்துள்ளார்.
அதேபோல் திராவிடர் கழக பிரச்சார செயலாளரும், வழக்கறிஞருமான அருள்மொழிக்கு பெரியார் ஒளி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி, இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்துக்கு காமராசர் கதிர், பேராசிரியர் ராஜ் கௌதமனுக்கு அயோத்திதாசர் ஆதவன், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.என். சிக்கந்தருக்கு காயிதேமில்லத் பிறை, கல்வெட்டியலறிஞர் எ.சுப்பராயலுவுக்கு செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.












Click it and Unblock the Notifications