திமுக சொன்ன வார்த்தை.. விஜய்யுடன் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கும் திருமாவளவன்?
சென்னை: வரும் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெறும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் ஒரே மேடையில் திருமாவளவனும் விஜய்யும் கலந்து கொள்கிறார்களா? என்ற கேள்வி கடந்த 3 வாரங்களாக தமிழக அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், திருமாவளவன் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த மாதம் அக்டோபர் 27 ஆம் தேதி தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், தனது கட்சியுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் எனவும் கூறினார். விஜய்யின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பெரும் விவாதப்பொருளானது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவன், பல ஆண்டுகளாகவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது பற்றி பேசி வரும் நிலையில், விஜய்ய்யின் பேச்சு அவருக்கு விடுத்த நேரடி அழைப்பு போலவே தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறினர். எனினும், திருமாவளவன், விஜய்யை விமர்சித்து கடுமையாக அறிக்கை விட்டதோடு, திமுக கூட்டணியில் இருந்து விலக போவது இல்லை என ஆணித்தரமாக கூறினார்.
ஆனாலும் விஜய்யின் பேச்சு ஏற்படுத்திய தாக்கம் தமிழக அரசியலில் இன்னும் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. இதற்கிடையே, சென்னையில் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெறும் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய்யும் திருமாவளவனும் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது.
திருமாவளவன் புத்தகத்தை வெளியிட விஜய் அதனை பெற்றுக்கொள்வார் என்று சொல்லப்பட்டது. வரும் 2026 சட்டமன்ற தேர்தல் தான், தங்களின் இலக்கு என்றும் பாஜக மற்றும் திமுக கட்சிகளை நேரடியாக விமர்சித்த விஜய், பிற கட்சிகளை விமர்சிக்கவில்லை. இதனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை தனது கட்சி பக்கம் இழுக்கவும் விஜய் வியூகம் வகுத்து தான் இப்படி விமர்சித்ததாக பேசப்பட்டுகிறது.
திமுகவை தனது அரசியல் எதிரியாக பிரகடனப்படுத்தியிருக்கும் விஜய்யுடன் ஒரே மேடையில் திருமாவும் பகிர்ந்து கொள்ளவிருப்பதை திமுக தலைமை அவ்வளவாக ரசிக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில்தான், நடிகர் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தன்னால் பங்கேற்க முடியாது என்று திருமாவளவன் கூறியதாக சொல்லப்படுகிறது.
தற்போதைய அரசியல் சூழலில், விஜய்யுடன் ஒரே மேடையை பகிர்ந்தால் அது தேவையில்லாத அரசியல் யூகங்களுக்கும் விவாதங்களுக்கும் வித்திடும் எனக் கருதிய திருமாவளவன் இந்த முடிவை எடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. தனது முடிவை நிகழ்ச்சியை நடத்தும் ஊடக நிறுவனத்திடமும் திருமாவளவன் தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications