Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கம், வெள்ளி வாங்கியவர்களுக்கு... 25 வருடங்களில் கற்பனை செய்ய முடியாத சிறந்த லாபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் 25 வருடங்களாகவே தங்கம் மற்றும் வெள்ளி மிகச்சிறந்த லாபம் தரும் சொத்தாக இருந்து வருகிறது. அண்மை காலத்தில் வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் புதிய விருப்பமாக மாறியுள்ள வெள்ளி, தங்கத்தைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. பங்கு சந்தையில் பங்குகளை வாங்குவது என்பது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச சந்தைகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் தங்கம் மற்றும் வெள்ளி யாரும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத சிறந்த லாபத்தை அளித்துள்ளன.

இது பற்றி சற்று விரிவாக பார்ப்போம். இந்தியாவில் உள்நாட்டு சந்தையில் 1999 இறுதி முதல், 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் ரூ. 4,400-லிருந்து இன்று ரூ. 1.4 லட்சத்திற்கு மேல் உயர்ந்திருக்கிறது. இது 14.3% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் ஆகும். வெள்ளி 1999 இறுதியில் ஒரு கிலோ ரூ. 8,100-ஆக இருந்தது. கடந்த சனிக்கிழமையன்று ரூ. 2.5 லட்சத்திற்கும் சற்று அதிகமாக உயர்ந்துள்ளது, இதன் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 14.1% ஆகும்.

Those who bought gold and silver have received unimaginable returns over 25 years in India

தங்கம், வெள்ளியை ஒப்பிடுகையில், இந்தியாவின் பங்குச் சந்தை குறியீடுகளான என்எஸ்இ நிஃப்டி 11.7% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகித வருவாயையும், தேசிய பங்குசந்தை குறயீடான சென்செக்ஸ் 11.5% வருவாயையும் வழங்கியுள்ளன. கடந்த 25 வருடத்தில் தங்கம், வெள்ளியின் அதீத லாபத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால், வெள்ளியின் லாபத்திற்கு இணையாக சென்செக்ஸ் இன்று அதன் தற்போதைய அளவான 85,000 புள்ளிகளைப் போல இருமடங்கு, அதாவது 1.6 லட்சம் புள்ளிகள் என்ற அளவில் இருந்திருக்க வேண்டும்.

நிஃப்டி வெள்ளியின் லாபத்திற்கு இணையாக இருந்திருக்க வேண்டுமென்றால், அது அதன் தற்போதைய நிலையான 26,000 புள்ளிகளிலிருந்து கிட்டத்தட்ட இருமடங்கு உயர்ந்து சுமார் 48,000 புள்ளிகளாக இருந்திருக்க வேண்டும். தங்கம், வெள்ளி விலையைத் தீர்மானிக்கும் பல்வேறு காரணிகள் மற்றும் அண்மை கால ஆண்டுகளில் அதிகரித்துள்ள புதிய தேவைகளைக் கருத்தில் கொண்டால், இந்த அதீத லாபம் இன்னும் தொடர வாய்ப்பு இருக்கிறது.

நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்டின் விக்ரம் தவான் இதுபற்றி கூறுகையில், போர்ட்ஃபோலியோ என்று எடுத்துக் கொண்டால், தங்கம் ஒரு முக்கிய அங்கமாகத் தொடர்கிறது. கோல்ட் இடிஎஃப்-கள் முதலீடு செய்வதற்கு ஒரு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட மற்றும் திறமையான வழியை வழங்கி வருகின்றன. தங்கத்தின் விலை குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், ஒரு நல்ல சொத்து தரும் போர்ட்ஃபோலியோ என்பதில் இருந்து. வருகிறது" என்று தவான் டைம் ஆஃப் இந்தியா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

தங்கத்தைப் பொறுத்தவரை, நகையாக சேர்த்து வைக்கும் பாரம்பரியத் தன்மையால் முதலீடாக தொடர்கிறது. சில மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் மொத்த குடும்பங்களின் தங்க இருப்பு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக் சமமாகவோ அல்லது சற்று அதிகமாகவோ இருக்க வாய்ப்பு உள்ளது.

ஒரு நாடாக, உலகில் தங்கம் வாங்குவதில் முதல் இரண்டு இடங்களில் இந்தியா உள்ளது. வெள்ளியைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளாக இந்தியாவில் நாணயங்கள், கட்டிகள், பாத்திரங்கள் ஆகியவற்றிற்கே அதிக தேவை இருந்தது, நகைகளுக்குக் குறைவாகவே இருந்தது. இருப்பினும், சமீபத்திய விலை உயர்வு காரணமாக அந்த நிலை மாறி வருவதாக உள்ளூர் நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகிறார்கள். தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், மக்கள் தற்போது நகைகள் தயாரிக்க இரண்டையும் கலந்து பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. வெள்ளி நகையில் தங்க முலாம் பூசுவது அதிகரித்து வருகிறது. அதேபோல் 9 கிராம் தங்கத்தின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.

தங்கம், வெள்ளி இப்படி அதிகரிக்க அமெரிக்கா முக்கிய காரணம் ஆகும். அமெரிக்கா தொடர்ச்சியான வட்டி விகிதக் குறைப்புகள் செய்ததால் தங்கம் பாதுகாப்பான முதலீடாக மாறியது. ஏனெனில் வட்டி விகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த காரணத்தால் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் மதிப்பு சரிந்தது. தங்கம், வெள்ளி விலை டாலரில் விலை நிர்ணயம் செய்யப்படுவதால், விலையை உயர்த்தியது. இந்தியாவில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவும் விலை உயர இன்னொரு முக்கிய காரணமாக இருக்கிறது.

அதேபோல் ரஷ்யா உக்ரைன் போர், இஸ்ரேல் காஸா இடையே பதற்றம், இந்தியா, சீனாவிற்கு அமெரிக்கா விதித்த வரி, ஐரோப்பா நாடுகளுக்கு எதிராக ரஷ்யா எடுத்து வரும் முடிவுகள் போன்ற புவி சார் பதற்றங்கள் தங்கம் விலை உயர முக்கிய காரணமாகவும் இருக்கின்றன. கொந்தளிப்பான புவிசார் அரசியல் சூழல் மற்றும் கொள்கை நிச்சயமற்ற தன்மை ஆகியவை பாதுகாப்பான முதலீட்டுத் தேவையினை உயர்த்தி வெள்ளி விலை உயர காரணம் என்று சில்வர் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த காரணம வெள்ளியை விடத் தங்கத்திற்கே அதிகப் பொருத்தமானது என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.

தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு விலையுயர்ந்த உலோகங்களுக்கான வணிக தேவையும் விலை உயர்வுக்குக் காரணமாகிறது. வெள்ளியைப் பொறுத்தவரை, சூரிய ஆற்றல், மின்சார வாகனம் மற்றும் செமிகண்டக்டர்கள் ஆகிய மூன்று வளர்ந்து வரும் தொழில்துறைகளுக்கு இப்போது அதிகம் தேவைப்படுகிறது. இதுவே வெள்ளி விலை கடுமையாக உயர காரணமாக இருக்கிறது என்று வர்த்தகர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். வெள்ளிக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அது தேவைக்கேற்ப கிடைக்கவில்லை என்றும் வர்த்தகர்கள் கூறுகிறார்கள். இது வெள்ளியை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+