சென்னையில் 30 வயதுக்கு கீழ் 3 பேர் கொரோனாவால் இன்று மரணம்- இளைஞர்களே ரொம்ப கவனம்
சென்னை: சென்னையில் கொரோனா வயது வித்தியாசமின்றி மனித உயிர்களை காவு வாங்கி வருகிறது. சென்னையில் இன்று மட்டும் 30 வயதுக்கு கீழே உள்ள 3 இளைஞர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்று நோயானது முதியவர்கள், நோயாளிகளைத்தான் அதிகம் பாதிக்கிறது என கூறப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்பினரையும்தான் அதிக அளவில் பாதித்து வருகிறது.

தமிழகத்தில் 12 வயது வரையிலான குழந்தைகள் 2533 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 வயது முதல் 60 வயது வரையிலானவர்கள் 41, 742 பேரும் 60 வயதுக்கு மேல் 5918 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா முதியவர்களை மட்டும் இல்லாமல் இளைஞர்களையும் கூட அதிகம் பாதித்து வருகிறது.
தமிழகத்தில் இன்று கொரோனாவால் 48 பேர் மரணம் அடைந்தனர். இதில் சென்னையில் 21 வயது, 24 வயது மற்றும் 25 வயது இளைஞர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
30 வயது ஆண் மற்றும் 37 வயது பெண்ணும் கொரோனாவால் சென்னையில் உயிரிழந்திருக்கின்றனர். ஆகையால் கொரோனா என்பது முதியவர்களைத் தாக்கும், அதுவும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டோரை மிக அதிகமாக தாக்கும் என்கிற அலட்சியம் தவறானது என்பதையே இது வெளிப்படுத்துகிறது.
கொரோனோ பாதிப்பு என்பது இளைஞர்களையும் தாக்கி உயிரை பறிக்கக் கூடியதுதான். அதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இளைஞர்களும் முழு அளவில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். கொரோனா நம்மை எதுவும் செய்யாது என்கிற அசால்ட்டுடன் நகர்வலம் போவது, கூடி விளையாடுவது போன்ற கூத்துகளை நிறுத்திக் கொண்டால் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.












Click it and Unblock the Notifications