இவ்ளோ தூரமா? சென்னை எழும்பூரில் திடீரென இடம் மாறிய டிக்கெட் கவுண்டர்.. ரயில் பயணிகள் சிரமம்
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வடக்கு பகுதியில் உள்ள டிக்கெட் கவுண்டர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இன்று திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பயணிகளின் தேவைகளை அறிந்து ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்தவும் ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அம்ரித் பாரத் என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேம்பாட்டு பணிகள்: அதன்படி சென்னை எழும்பூர் ரயில் நிலையமும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுகிறது. அதாவது ரூ.734 .91 கோடி மதிப்பீட்டில் இந்த ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. 144 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ரயில் நிலையத்தில், விமான நிலையத்திற்கு நிகரான மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன.
விமான நிலையத்திற்கு நிகராக: அதாவது விமான நிலையத்திற்கு நிகராக, பயணிகள் வருகை மற்றும் புறப்பாடு பகுதி, நவீன பயணிகள் காத்திருப்பு அறை, புதிய எஸ்கலேட்டர், பார்சல்களை கையாள்வதற்கான தனிப்பகுதி என பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. இதிலும் குறிப்பாக எழும்பூர் ரயில் நிலையத்தின் கட்டிடத்தின் பழமை மாறாமல் மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தான் எழும்பூர் ரயில் நிலையத்தின் வடக்கு பகுதியில் உள்ள டிக்கெட் கவுண்டர் இன்று எந்த வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மறு கட்டமைப்பு பணிகளின் காரணமாக எழும்பூர் ரயில் நிலையத்தின், வடக்கு பகுதிகளில் இயங்கி வந்த, முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா டிக்கெட் கவுண்ட்டர்கள் இன்று முதல் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டிக்கெட் கவுண்ட்டர்கள் இடமாற்றம்: இதற்கு பதிலாக புதிய டிக்கெட் கவுண்ட்டர்கள், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலைய வளாகம் அருகே அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய டிக்கெட் கவுண்டரில் 2 முன்பதிவில்லா டிக்கெட் கவுண்டரும், 3 முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டர்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இதேபோல், 3 தானியங்கி டிக்கெட் எந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
சிரமம் அடைந்த பயணிகள்: எந்த வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென டிக்கெட் கவுண்ட்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதால் பயணிகள் பலரும் வழக்கமாக வரும் இடத்திற்கு வந்து டிக்கெட் பெற முயற்சித்தனர். அவர்கள் டிக்கெட் கவுண்டர் வேறு எங்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து தேடி அலைந்தனர். இதேபோல் இடமாற்றம் செய்யப்பட்ட டிக்கெட் கவுண்டருக்கு எப்படி செல்வது என்பது குறித்த குறியீடுகளும் வைக்கப்படவில்லை.
இதனால் வயதானவர்கள், பெண்கள் என பலரும் இடமாற்றம் செய்யப்பட்ட டிக்கெட் கவுண்ட்டர்களை தேடி அலைந்ததை காண முடிந்தது. மின்சார ரெயில் டிக்கெட், முன்பதிவு டிக்கெட் எடுப்பதற்காக வந்த பயணிகள் பலரும் சிரமமடைந்தனர். கடும் அவதிக்கு உள்ளாகினர்,
பயணிகள் கோரிக்கை: இதேபோல் தற்போது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள புதிய டிக்கெட் கவுண்டர்களில் போதிய இடவசதி இல்லை. இதனால் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் பெற்று வருகின்றார்கள். இதனால், மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். எனவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ள டிக்கெட் கவுண்டர்களில் போதிய வசதிகளை செய்து தருமாறு பயணிகள் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரயில்வே விளக்கம்: இது தொடர்பாக ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில், "சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11 வது பிளாட்பார்மை ஒட்டி உள்ள முன்பதிவு டிக்கெட் மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட் கவுண்ட்டர்கள் இன்று 16 ஆம் தேதி காலை முதல் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்காலிகமாக இந்த டிக்கெட் கவுண்ட்டர்கள், பூந்தமல்லி சாலையில் ஆர்பிஎப் அலுவலகத்தில் செயல்படும். இந்த மையத்தில், 3 முன்பதிவு மற்றும் 3 முன்பதிவில்லாத டிக்கெட் கவுன்ட்டர்கள் செயல்படுகின்றது" என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications