அவர் சறுக்க.. இவர் கிராஃப் எகிற.. எல்லாம் நெருங்கி வருதே! விட்டதைப் பிடிக்கும் தென் மாவட்ட ‘புள்ளி’!
தென் மண்டலத்தில் பலம் பெற ஆர்.பி.உதயகுமாருக்கு காலம் கனிந்து வந்துள்ளது.
சென்னை : கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாக எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டும், சட்டசபையில் முன்வரிசையிலும் சீட் கிடைக்கவில்லை, கட்சியிலும் தென் மண்டலத்தில் செல்வாக்கு பெற முடியவில்லை என வெதும்பி வந்த ஆர்.பி.உதயகுமாருக்கு மீண்டும் 'லக்' அடித்துள்ளது.
ஆர்பி உதயகுமாரை வைத்து என்னென்னவோ கணக்குப் போட்டுத்தான், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பு கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனாலும் எதிர்பார்த்த அளவு சவுத்தில் ஆர்பி உதயகுமார் ரிசல்ட்டை கொடுக்கவில்லை.
இந்நிலையில், ஆர்பி உதயகுமார் தனது மகள் திருமணம் உட்பட 51 ஜோடிகளின் திருமணத்தை ஏகபோக கொண்டாட்டத்தோடு நடத்திக் காட்டியுள்ளார். இந்த திருமண விழா மேடையில் இருக்கும்போதுதான் அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் வந்தது. இது ஈபிஎஸ்ஸுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

பிரம்மாண்ட கல்யாணம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75ஆவது பிறந்தநாளை முன்னிட்டும், அதிமுகவின் 51ஆவது பொன்விழா ஆண்டை முன்னிட்டும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் ஏற்பாட்டில் மதுரை டி.குன்னத்தூரில் 51 ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமணம் இன்று நடைபெற்றது. இந்த 51 ஜோடிகளில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகளும் ஒருவர். மதுரை திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் பிரமாண்டமான முறையில் இந்த திருமண விழா நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி, இந்த திருமணங்களை நடத்தி வைத்தார்.

எடப்பாடி உற்சாகம்
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் வந்த நிலையில் தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானது. உச்ச நீதிமன்றம் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதை எடப்பாடி பழனிசாமியிடம் கூறி அவரை மகிழ்ச்சி பொங்க வைத்தார் ஆர்.பி.உதயகுமார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரபரப்பு ஒருபுறம், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த கலக்கம் ஒருபுறம் இருக்க, இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, இந்தச் செய்தியைக் கேட்டு உற்சாகமானார். மேடையில் பேசும்போதே தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஈபிஎஸ், ஆர்.பி.உதயகுமாரை புகழ்ந்து தள்ளினார்.

சில நிமிடங்களிலேயே
எடப்பாடி பழனிசாமி மேடையில் பேசிய போது, "தீர்ப்பு வருவதை முன்னிட்டு நான் நேற்று கலங்கி போயிருந்தேன், பயத்துடன் இருந்தேன். தீர்ப்பு எவ்வாறு வரும் என்பதை எண்ணி இரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை. நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அம்மா கோவிலில் வேண்டிக்கொண்ட சில நிமிடத்திலேயே நல்ல தீர்ப்பு உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இனி எந்தக் கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது" என உற்சாகப் பேசினார்.

ஈபிஎஸ் போட்ட ஸ்கெட்ச்
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்கும் முடிவை எடுத்தபோது எடப்பாடி யோசித்த விஷயம், ஓபிஎஸ்ஸை வெளியேற்றினால், முக்குலத்தோர் சமூக வாக்குகள் தன் பக்கம் கிடைக்காதோ என்பதுதான். ஏற்கனவே, சசிகலா, டிடிவி தினகரனை கட்சியிலிருந்து நீக்கிய நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தையும் நீக்கினால், அந்த சமூகத்து வாக்குகள் அதிமுகவுக்கு கிடைப்பதில் சிக்கல் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கும் ஈபிஎஸ் பக்காவாக ஸ்கெட்ச் போட்டார்.

முக்குலத்தோர் பெல்ட்
ஓபிஎஸ்ஸை வெளியேற்றும் அதேசமயம், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு மிக முக்கியமான பொறுப்புகளை அளித்தார். ஓ.பன்னீர்செல்வம் வசமிருந்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியை ஆர்.பி.உதயகுமாருக்கும், அதிமுக பொருளாளர் பதவியை திண்டுக்கல் சீனிவாசனுக்கும் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. மேலும், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா உள்ளிட்ட சீனியர்களின் மனமும் கோணாத வகையில் வாக்குறுதிகளை அளித்தார் எடப்பாடி பழனிசாமி. இவர்கள் மூலம் ஓபிஎஸ்ஸின் கோட்டையை தன் பக்கம் மீட்டுவிடலாம் எனக் கணக்குப் போட்டார்.

பலம் காட்டிய ஆர்பி
அதற்கேற்றபடி, ஆர்பி உதயகுமாரும், ஓ.பன்னீர்செல்வத்தை சரமாரியாக தாக்கிப் பேசி வந்தார். ஓபிஎஸ் vs ஆர்பி உதயகுமார் என்ற நிலை ஏற்படும் அளவுக்கு முக்குலத்தோர் பெல்ட்டிலும், மதுரை மண்டலத்திலும் தனது பெயரை நிலைநிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார். தேனிக்கே சென்று திமுக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை பெரும் கூட்டத்தோடு நடத்திக் காட்டினார். மதுரை, சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு எடப்பாடி பழனிசாமியை அழைத்து வந்து பிரமாண்டம் காட்டினார்.

விரிவுபடுத்திய உதயகுமார்
ஆனால், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை சபாநாயகர் அங்கீகரிக்கவில்லை. பழையபடி, எடப்பாடி பழனிசாமிக்கு அருகே ஓபிஎஸ் தான் அமரவைக்கப்பட்டார். மேலும், அக்டோபர் மாதம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தியின்போது ஓபிஎஸ் தரப்பின் கையே ஓங்கிக் காணப்பட்டது. இதனால், ஆர்பி உதயகுமாரை அதிமுக தென் மண்டலத்தின் முகமாக முன்னிறுத்தும் ஈபிஎஸ்ஸின் முயற்சி பலிக்கவில்லை என்றே பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று 51 ஜோடிகளின் திருமண விழாவின் மூலம் தனது செல்வாக்கை விரிவு படுத்தியுள்ளார் ஆர்பி உதயகுமார்.

தென் மாவட்டங்கள் முழுக்க
இந்த திருமண விழாவிற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கியமான அதிமுக பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் தென் மாவட்டங்கள் முழுவதும் அதிமுகவினருக்கு தாம்பூலத் தட்டோடு அழைப்பிதழ் கொடுத்தார் உதயகுமார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மட்டுமல்லாது, தென் மாவட்டங்களைச் சேர்ந்த கிளைக் கழக நிர்வாகிகள் வரை தாம்பூலத் தட்டோடு திருமண பத்திரிக்கை வழங்கப்பட்டது. ஓபிஎஸ்ஸின் செல்வாக்கைச் சரித்து தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் உதயகுமாருக்கு, இந்த பிரமாண்ட திருமண விழா நல்ல வாய்ப்பாக அமைந்தது.

சென்டிமென்ட்
அதோடு கூடுதலாக இன்று இந்த திருமண விழா மேடையில் ஈபிஎஸ் இருந்தபோதே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி, சென்ட்டிமென்ட்டாக எடப்பாடிக்கு இந்த மதுரை விசிட் பூஸ்ட் கொடுத்துள்ளது. ஆர்பி உதயகுமார் பேசும்போதும், "எடப்பாடியார் மேடைக்கு வரும்போது பின்னணியில் மக்களின் முதல்வர் என்ற பாட்டு ஒலித்தது. அந்த பின்னணியில் அவர் நடந்து வருவதை பார்க்கும்போது அழகர் நடந்து வருவது போல இருந்தது. அதனை உண்மை என்று மெய்ப்பித்துள்ளது உச்ச நீதிமன்ற தீர்ப்பு." என்றார்.

கனியும் காலம் - எகிறும் கிராஃப்
ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ள அதே நாளில், மதுரையில் ஆர்.பி.உதயகுமார் தனது செல்வாக்கை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். ஓபிஎஸ்ஸின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கும் அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை பெற்ற தென் மண்டல முகமாக தன்னை நிரூபித்திருக்கிறார் ஆர்பி உதயகுமார். இதனால், ஆர்பி உதயகுமார் ஓபிஎஸ் இடத்தைப் பிடிக்கும் காலம் கனிந்துவிட்டது என்கிறார்கள் தென் மாவட்ட ர.ரக்கள்.
-
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
ஓ.பன்னீர்செல்வத்திடம் ஏடாகூட கேள்வி.. சட்டென டென்ஷனான பெரியகருப்பன் -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்?












Click it and Unblock the Notifications