திமுகவையும், இபிஎஸ்-சையும் கடுமையாக தாக்கிய டிடிவி தினகரன்.. 'ஆஹா' இப்படி ஒரு பிளானா?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால் வேட்பாளரை வாபஸ் பெறுவதாக டிடிவி தினகரன் அறிவித்தார்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது கட்சியின் வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்த டிடிவி தினகரன், காலம் இப்படியே போய்விடாது என்றும் துரோக சக்தி என எடப்பாடியை மறைமுகமாக சாடியும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அறிவித்தது. அதன்படி ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரசாத் போட்டியிடுவார் என்று டிடிவி தினகரன் கடந்த ஜன.27-ஆம் தேதி அறிவித்தார்.
துணைப் பொதுச் செயலாளர் சண்முகவேலு தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்களை கொண்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களையும் டிடிவி தினகரன் அறிவித்து இருந்தார்.

குக்கர் சின்னம் ஒதுக்க மறுத்ததால்
அதன்பிறகு தேர்தல் பிரசாரத்திலும் அமமுக சுறுசுறுப்பு காட்டியது. வேட்பாளர் சிவபிரசாத், கடந்த 3ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்து கடந்த சில நாட்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் ஒதுக்க மறுத்ததால் வேட்பாளரை வாபஸ் பெறுவதாக டிடிவி தினகரன் அறிவித்தார். மேலும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஓராண்டு காலத்திற்குள் வரவிருக்கும் சூழலில், புதிய சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.

துரோக சக்தி என விமர்சனம்
எனவே, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் நமது வெற்றிச்சின்னமான குக்கர் சின்னத்தோடு தேர்தல்களை சந்திப்போம்" என்று தினகரன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் டிடிவி தினகரன் கட்சி தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், துரோக சக்தி என எடப்பாடி பழனிசாமி தரப்பையும் கடுமையாக தாக்கியிருக்கிறார். டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

எந்த ஜனநாயக இயக்கமும்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தலைமைத் தேர்தல் ஆணையத்தால் கழகத்திற்கு 'குக்கர்' சின்னம் வழங்கப்படாத நிலையில் இந்த மடலை உங்களுக்கு(தொண்டர்களுக்கு) எழுதுகிறேன். இந்தியாவில் எந்த ஜனநாயக இயக்கமும் சந்திக்காத இன்னல்களையும், இடையூறுகளையும், முட்டுக்கட்டைகளையும் தாண்டிதான் ஐந்து ஆண்டுகளாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பயணித்து வருகிறது. ஜெயலலிதாவின் கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, தொடரும் இந்த லட்சியப் போராட்டத்தில் உங்கள் ஒவ்வொருவரின் துணையோடுதான் எதிர்வரும் அத்தனை தடைகளையும் தாண்டி வந்து கொண்டிருக்கிறோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் அப்படித்தான்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரால்
தேர்தல் அறிவித்தவுடன் வேட்பாளர் தேர்வில் தொடங்கி பிரச்சாரத்தை ஆரம்பித்தது வரை முழு வீச்சில் நாம் களமிறங்கினோம். தலைமைக் கழக நிர்வாகிகள் தொடங்கி இந்த இயக்கத்தின் கடைகோடி தொண்டர்கள் வரை வழக்கமான உற்சாகத்தோடும், உத்வேகத்தோடும் அடுத்த நாளே ஈரோட்டில் குவிந்தது நம் இயக்கத்திற்கே உரிய தனிச்சிறப்பு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரால் தீய சக்தி என்று அடையாளம் காட்டப்பட்டு, தேர்தல் வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்ற மனமில்லாமல் மக்களை ஏமாற்றிவரும் தி.மு.க தலைமையிலான அணியையும், ஜெயலலிதாவின் தொண்டர்களை தொடர்ந்து ஏமாற்றிவரும் துரோக சக்தியையும் மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டி முத்திரை பதிக்க வேண்டும் என்ற வேகத்தில் கடந்த ஒரு வாரமாக நீங்கள் காட்டிய ஆர்வமும், உழைப்பும் மெய் சிலிர்க்க வைத்தன.

கம்பீரமாக எழுந்து நின்று
அதற்காக என்னுடைய இதய நன்றிகளை உங்கள் ஒவ்வொருவருக்கும் காணிக்கையாக்குகிறேன். கன்னியாகுமரி முதல் திருத்தணி வரை தமிழகம் முழுவதும் இருந்து களம்காண வந்த என் அன்பு கழக உடன்பிறப்புகள் அனைவரும் பாதுகாப்பாக அவரவர் ஊர்களுக்கு சென்று சேர்ந்திட வேண்டுகிறேன். காலம் இப்படியே போய்விடாது; நாம் கம்பீரமாக எழுந்து நின்று, அம்மாவின் லட்சியங்களை நிறைவேற்றக்கூடிய நாள் வெகுதொலைவில் இல்லை. நெருங்கிவிட்ட நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கென தனி இடத்தை பிடிப்பதற்கு உழைப்பதற்கான பணிகளில் முழுக்கவனம் செலுத்திடுவோம். தலைமைக் கழக அலுவலகத்தில் விரைவில் கூடவுள்ள நிர்வாகிகள் கூட்டத்தில் சந்திப்போம். உறுதியாக நாளை நமதே" என்று தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் யாருக்கு ஆதரவு
திமுகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து ஒரு வேட்பாளரை நிறுத்துவதென்பது நல்ல ஒரு யோசனை. அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டால், அதுபற்றி பேசலாம் என்று கூறிய டிடிவி தினகரன் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதாக கூறி வேட்பாளரையும் அறிவித்தார். தற்போது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் நிலையில், டிடிவி தினகரன் யாருக்கு ஆதரவு அளிப்பார் என்ற கேள்விகள் எழுந்து வந்த நிலையில் திமுகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பையும் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

அதிமுகவின் வாக்குகள் பிளவுபடாமல்
இதன் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதியில் யாருக்கு ஆதரவு இல்லாத ஒரு நிலைப்பாட்டை அமமுக எடுக்கும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க ஏற்கனவே பன்னீர் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்ற நிலையில் இன்று டிடிவி தினகரனும் வாபஸ் பெற்று இருப்பதால் அதிமுகவின் வாக்குகள் பிளவுபடாமல் இரட்டை இலைக்கே வந்து சேரும் என புது தெம்புடன் அதிமுக நிர்வாகிகள் பேசி வருகின்றனர்












Click it and Unblock the Notifications