தடுமாறுது தாமரை! ரூ.4 கோடி கேஸில்.. பாஜக நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் உட்பட 4 பேருக்கு சம்மன்
சென்னை: நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உட்பட பாஜக நிர்வாகிகள் நாளை மறுநாள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறை அமலில் இருந்தபோது, தாம்பரம் ரயில்நிலையத்திற்கு வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருந்தது.

தாம்பரம்: எனவே, தாம்பரம் போலீசாரும், தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் உடனடியாக சோதனையிட்டனர்... அப்போது S 7 கோச்சில் 3 நபர்கள் 6 பைகளில் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து 3 நபர்களை கைது செய்த போலீசார், அவர்களை தாம்பரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.. அப்போது அந்த 3 நபர்களும் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஓட்டலில் வேலை செய்வதாகவும், இந்த பணம் தேர்தல் செலவுக்காக அவர் எடுத்து வர சொன்னதாகவும் போலீசாரிடம் சொன்னார்கள்.
சம்மன்: இந்த தகவலின்பேரில், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.. அத்துடன், தாம்பரம் காவல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் பரிந்துரையை ஏற்று, வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் 26ம் தேதி மாற்றி உத்தரவிட்டார். இது தொடர்பான ஆவணங்களும் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
ஆவணங்கள்: ஆவணங்களை பெற்றுக்கொண்ட சிபிசிஐடி போலீசாரும் விசாரணையை ஆரம்பித்துள்ளார்.. இந்நிலையில், 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உட்பட 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவிநாயகம், தொழில் பிரிவு தலைவர் கோவர்தன் , நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக நைனார் நாகேந்திரன் உட்பட பாஜக நிர்வாகிகள் நாளை மறுநாள் நேரில் ஆஜராக வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாஜக நயினார் நாகேந்திரனுக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications