திருப்பூரில் மோடி.. அங்கேயே கிளம்பி போறாரு ஆளுநர் ரவி.. 'பிரதமர் - சூரஜ்' நிகழ்ச்சி - நலத்திட்ட உதவி
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, இன்றைய தினம் திருப்பூருக்கு வந்து மத்திய அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்..
பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களுக்கு சூரஜ் திட்டத்தின்கீழ், பல்வேறு நலத்திட்ட உதவிகள் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது... இதில் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 600 மாவட்டங்களில் மத்திய அரசு திட்டத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் இன்றைய தினம் வழங்கப்படுகின்றன.

பிரதமர் மோடி: காணொளி காட்சி மூலம் இதனை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார். திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று மாலை 3.45 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ரவி கலந்து கொள்கிறார்.
அதுமட்டுமல்ல, 300க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆளுநர் முன்னிலையில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.. இதைத்தவிர, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைந்து உள்ளதா ? என்பது குறித்தெல்லாம் ஆளுநர் நேரிலேயே ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
லைவ் ரிலே: இந்த நிகழ்ச்சியில், மத்திய அரசு திட்டங்களில் பயனடைந்த பயனாளிகளுடன், பிரதமர் மோடி கலந்துரையாட போகிறாராம்.. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திலேயே, பிரதமர் கலந்துரையாடும் நிகழ்வுகள், கூட்டரங்கில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கவர்னர் ரவி, சென்னையில் இருந்து மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு, 2.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார்... பிறகு, மதியம் உணவு சாப்பிட்டதுமே கவர்னர் அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மாலை 3.45 மணிக்கு வருகிறார்.
இதுதான் பிளான்: தொடர்ந்து நடைபெறுகிற நிகழ்ச்சியில் கலந்துவிட்டு, 4.45 மணிக்கு திருப்பூரில் இருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்படுகிறார். கவர்னர் வருகையை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பும் திருப்பூரில் போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications