வேண்டிய வரம் தரும் திருத்தணி முருகன்... வெற்றிக்காக முட்டிபோட்டு படியேறி வேண்டிய திமுக நிர்வாகிகள்
திமுக வேட்பாளர் சந்திரன் வெற்றி பெற வேண்டி திமுக நிர்வாகிகள் திருத்தணி முருகன் கோயில் அடிவாரத்திலிருந்து 365 படிக்கட்டுகளில் முட்டி போட்டு ஏறி வெற்றி பெற வேண்டிக் கொண்டனர்.
சென்னை : தேர்தல் வெற்றிக்காக வேட்பாளர்கள் பிரசாரத்தில் என்னென்னமோ செய்து வருகின்றனர். திருத்தணி சட்டசபைத் தொகுதியில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்று முட்டி போட்டு படியேறி வேண்டுதல் வைத்துள்ளனர். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா என்ற முழக்கத்தோடு திமுக நிர்வாகிகள் முட்டி போட்டு படியேறி வேண்டிக்கொண்டது பக்தர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
முருகப்பெருமான் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படுவது திருத்தணி முருகன் ஆலயம். திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த சுப்ரமணியர் திருத்தணியில் சினம் தணிந்தார் என்கிறது கந்த புராணம். வள்ளியை திருமணம் முடித்ததும் இங்குதான்.
வேண்டிய வரம் தரும் முருகப்பெருமானை வேண்டி வேல் யாத்திரையை பாஜக நிர்வாகிகள் துவக்கியதும் இங்குதான். ஸ்டாலின் முதன் முதலில் கையில் வேல் ஏந்தியதும் இங்குதான். இங்கு வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

திருத்தணி தேர்தல் களம்
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் நாளை 4ஆம் தேதி இரவு 7 மணியுடன் முடிவடைகிறது. வேட்பாளர்கள் வித விதமாக வாக்காளர்களைக் கவர்ந்து வாக்கு சேகரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டசபைத் தொகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக இந்த தொகுதியில் களம் காண்கிறது.

அதிமுக திமுக போட்டி
அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரே இந்த தொகுதியை தக்க வைத்து வந்த நிலையில் இந்த முறை அதிமுகவும் திமுகவும் நேரடியாக களம் காண்பதால் திமுக மற்றும் அதிமுகவினரிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்று திமுக வேட்பாளர் சந்திரன் கடுமையாக பிரசாரம் செய்து வருகிறார்.

திமுக வேட்பாளர்
திருத்தணி சட்டசபைத் தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள சந்திரன் 3 முறை நகர் மன்றத் தலைவராக இருந்தவர். தொகுதி மக்களிடம் அறிமுகமானவர். சந்திரன் வெற்றி பெற வேண்டி திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திமுக நிர்வாகிகள் வித்தியாசமான முறையில் வேண்டிக்கொண்டனர்.

மலையேறிய நிர்வாகிகள்
வருடத்தின் மொத்த நாட்களான 365 நாட்களை குறிக்கும் வகையில் திருத்தணியில் படியேறி முருகனை தரிசிக்க படி அமைக்கப்பட்டுள்ளது. மலை அடிவாரத்திலிருந்து கோவில் வரை உள்ள 365 படிக்கட்டிகளிலும் திமுக கிளை செயலாளர் சந்திரசேகர் மற்றும் திமுக தொண்டர்கள் 20 பேர் முட்டி போட்டு ஏறிச் சென்று வேண்டிக் கொண்டனர்.

முருகனின் அருள்பார்வை கிடைக்குமா
சந்திரன் வெற்றிக்காக வேண்டிய வரம் தரும் முருகனிடம் முட்டி போட்டு திமுக தொண்டர்கள் வேண்டிக்கொண்டுள்ளனர். வேட்பாளர் சந்திரன் வெற்றி வாகை சூடுவாரா? முருகனின் அருள்பார்வை கிடைக்குமா பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications