அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டையில் திடீரென முளைத்த பட்டை.. எடப்பாடி பழனிசாமி பாக்கெட்டில் என்ன அது?
சென்னை: "யார் அந்த சார்?" என்ற பேட்ச் பொருத்தப்பட்ட சட்டை அணிந்து, அதிமுக எம்எல்ஏக்கள் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு வருகை தந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை அதிமுக தீவிரமாக கையில் எடுத்துள்ளது தெரிய வருகிறது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது. இந்த புதிய ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்க இருந்த நிலையில் உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறி உள்ளார். தொடா்ந்து, கூட்டத்தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூடி விவாதிக்கவுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.
சட்டப்பேரவை வளாகத்தில், அதிமுக எம்எல்ஏக்களுடன் கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தொடரில் எழுப்பப்பட உள்ள பிரச்சனைகள் குறித்து எம்எல்ஏக்களுக்கு சில அறிவுறுத்தல்களை அவர் வழங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.
அதன் பிறகு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் அணிந்திருந்த சட்டையில், "யார் அந்த சார்?" என்ற வாசகத்துடன் பேட்ச் பொருத்தப்பட்டிருந்தது. அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை கேள்வி எழுப்பும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் யார் அந்த சார் என்று வாசகம் அடங்கிய பேட்ஜை அணிந்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் பகுதியில் சாலையோரம் பிரியாணி கடை வைத்திருந்த ஞானசேரன் என்பவர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் தொடர்பான முதல் தகவல் அறிக்கை கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தமிழக அரசையும், காவல்துறையையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் செல்போனில் பேசியபோது சார் (Sir) என்ற வார்த்தையை பயன்படுத்தினார் என பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில் தெரிவித்ததாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, யார் அந்த சார்? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர், "யார் அந்த சார்?" என்ற வாசகத்துடன் போஸ்டர்களை ஒட்டினர். "யார் அந்த சார்?" என்ற கேள்வியுடன் எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக உறுப்பினர்கள் தங்கள் சட்டைகளில், "யார் அந்த சார்?" என்ற பேட்ச்சை அணிந்திருப்பதால் பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications