பிப்.12-ல் கூடும் தமிழக சட்டசபை- உரையை முழுவதும் வாசிப்பாரா? ஆளுநர் ஆர்என் ரவி திடீர் டெல்லி பயணம்!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் பிப்ரவரி 12-ந் தேதி தொடங்கும் நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திடீரென டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார். தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைப்பது, திருப்பி அனுப்புவது உள்ளிட்டவைகளால் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றம் போனது தமிழ்நாடு அரசு.

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார். அதேபோல துணைவேந்தர்களை நியமிக்கும் தேடுதல் குழுக்களையும் கைவிட்டார் ஆளுநர் ரவி. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை ஆளுநர் ரவி தொடர்ந்தும் தெரிவித்து வருகிறார். அண்மையில் மகாத்மா காந்தியடிகளை இழிவுபடுத்தும் வகையில் ஆளுநர் ரவி பேசியிருந்தது பெரும் சர்ச்சையானது.
தற்போது தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 12-ந் தேதி தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரை இடம் பெறும். கடந்த ஆண்டு தமிழ்நாடு என்ற பெயரை ஏற்க மறுத்து தமிழகம் என கருத்து தெரிவித்த நிலையில் சட்டசபையில் உரையாற்றினார் ஆளுநர் ரவி. அதற்கு சட்டசபையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆளுநர் உரையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காமராஜர், திராவிட மாடல் ஆகியவற்றை தவிர்த்துவிட்டு ஆளுநர் ரவி உரையாற்றினார். அத்துடன் அவராகவே சிலவற்றையும் ஆளுநர் உரையில் சேர்த்து வாசித்தார். இதனால் தமிழ்நாடு சட்டசபையில் அரசின் உரை மட்டுமே இடம் பெறும்; ஆளுநர் தன்னிச்சையாக வாசித்த உரை இடம்பெறாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை வாசித்தார். உடனே சட்டசபையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தது பெரும் சர்ச்சையானது.
அண்மையில் கேரளா சட்டசபையில் ஆளுநர் முகமது ஆரிப் கான், மாநில அரசின் உரையை முழுமையாக வாசிக்காமல் 1.15 நிமிடம் மட்டுமே வாசித்துவிட்டு வெளியேறியதும் பெரும் சர்ச்சையானது. இப்பின்னணியில் தமிழ்நாடு சட்டசபை வரும் 12-ந் தேதி கூடுகிறது. பிப்ரவரி 19-ந் தேதி தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரை இடம்பெற உள்ளது. இம்முறை ஆளுநர் ரவி என்ன மாதிரியான நிலைப்பாடு எடுக்கப் போகிறார்? என்பது எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இச்சூழலில் இன்று திடீரென ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்கிறார். டெல்லிக்கு 3 நாட்கள் பயணமாக செல்லும் ஆளுநர் ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். இச்சந்திப்பின் போது தமிழ்நாடு நிலவரம் குறித்து ஆளுநர் ரவி ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications