ஒரே நாடு ஒரே தேர்தல்.. தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிர்ப்பு.. முதல்வர் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராகவும், தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராகவும் தனித்தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். தமிழ்நாடு சட்டசபையின் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான இன்று 2 முக்கிய தீர்மானங்கள் மீது விவாதங்கள் நடைபெற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை எதிர்த்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நடைமுறைபடுத்தக்கூடாது என முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவிடம் திமுக ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது.

இதே போன்று, தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராகவும் சட்டசபையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதாவது, 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில், தற்போது உள்ள அதே விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை தொடரும் வகையில், சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றிய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள், தொகுதி மறுசீரமைப்பால், தங்கள் பிரதிநிதித்துவ பலத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு தீர்மானங்களை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.
நாட்டையும் நாட்டு மக்களையும் அச்சத்திலும் பதற்றத்திலும் வைக்கும் இரண்டு மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்து இந்த மாமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றியாக வேண்டிய நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது என்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானங்களின் மீது எம்எல்ஏக்கள் பலரும் பேசி ஆதரவு தெரிவித்தனர். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ, அரசியல் நோக்கத்திற்காக, ஆட்சியை தக்கவைப்பதற்காகவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டுவரப்படுகிறது. நாடு முழுவதும் தேர்தலை நடத்தும் அதிகாரிகளை பிரதமரே நியமிப்பார் என்றால் ஜனநாயகம் எங்கே இருக்கிறது?. தமிழ்நாடு சட்டசபையில் உள்ள ஜனநாயகம் நாடாளுமன்றத்தில் எங்கே இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் அச்சப்பட வேண்டாம் என்று கூறினார். எம்எல்ஏக்கள் விவாதத்திற்குப் பிறகு பேசிய அப்பாவு முதல்வர் கொண்டு வந்த இரண்டு தனித்தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
நான்காம் நாளான நாளைய தினம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேச உள்ளார். விடுமுறைக்குப் பிறகு வரும் 19ஆம் தேதியன்று 2024-25 ஆம் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். 20ஆம் தேதியன்று வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.












Click it and Unblock the Notifications