ஒத்திவைக்கப்பட்ட அண்ணாமலையின் யாத்திரை இன்று தொடக்கம்.. அதிமுக முறிவு குறித்த ரியாக்ஷன் இருக்குமா?
சென்னை: உடல் நலக்குறைவால் பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை ஒத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று முதல் மீண்டும் அண்ணாமலையின் பாத யாத்திரை தொடங்குகிறது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இதில் பங்கேற்கிறார்.
வரும் லோக்சபா தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்தும் விதமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் இறுதியில் அண்ணாமலையின் பாத யாத்திரை தொடங்கியது. அண்ணாமலை பல்வேறு மாவட்டங்களில் பாத யாத்திரை சென்றார்.

முக்கிய இடங்களில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை, ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அதிரடியாக அறிவித்து பாஜகவுக்கு ஷாக் கொடுத்தது. பாஜகவில் இருந்து விலகுவதற்கு அண்ணாமலையின் பேச்சுதான் காரணம் என அதிமுக குறை கூறியது.
இதனால் அதிமுக- பாஜக இடையே பெரும் பிரளயம் வெடித்தது. இந்த பஞ்சாயத்தில் டெல்லிக்கு அண்ணாமலை வரவழைக்கப்பட்டார். இதனால் அண்ணாமலையின் தமிழ்நாடு பாஜக தலைவர் பதவி பறிபோகும் என கூறப்பட்டது. பின்னர் டெல்லியில் இருந்து தமிழ்நாடு வந்த அண்ணாமலை திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஒரு வார கால ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்பட்டது. இதையடுத்து அண்ணாமலையின் பாத யாத்திரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட அண்ணாமலையின் பாத யாத்திரை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 3-வது கட்ட பாதயாத்திரையை தொடங்கும் அண்ணாமலை, பல்லடத்தில் அக்டோபர் 19, திருப்பூர் தெற்கு, வடக்கு தொகுதிகளில் அக்டோபர் 20-ல் பயணம் மேற்கொள்கிறார்.
திருப்பூரில் 3-வது கட்ட பாதயாத்திரை தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்க உள்ளார். அதிமுக- பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு டெல்லி சென்று விட்டு வந்த அண்ணாமலை, தனது பாத யாத்திரையை இன்று முதல் தொடங்க உள்ளது பாஜகவினர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications