ஜூன் 20-க்கு பின் திமுக அரசு மீதான ஊழல் புகார்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வழங்குவோம்- அண்ணாமலை
சென்னை: திமுக அரசு மீதான ஊழல் முறைகேடு புகார்களை வரும் 20-ந் தேதிக்குப் பின்னர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வழங்குவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
தமிழக அரசின் ஓராண்டுகால முறைகேடுகள் தொடர்பான புகார்களை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கொடுக்க உள்ளோம். வரும் 20-ந் தேதிக்குப் பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடன் இந்த ஊழல் முறைகேடு புகார்களை கொடுப்போம்.

எதிர்க்கட்சியே நாங்கதான்
திமுக அரசின் நல்ல விஷயங்களைப் பேசுவதற்கு ஆளும் கட்சியின் அமைச்சர்கள் இருக்கின்றனர். அதனால் எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் திமுக அரசு மீதான விமர்சனங்களை முன்வைக்கிறோம். தமிழ்நாட்டில் திமுக அரசின் முறைகேடுகளை, விமர்சனங்களை வெளியில் பேசுகிற தைரியம் தமிழக பாஜகவுக்கு மட்டுமே உண்டு. அதனால் நாங்கள் அதனை வெளிப்படையாக பேசுகிறோம்.

அதிமுக விமர்சனம்
பாஜகவைப் பொறுத்தவரை அதிமுகவை அழித்துதான் வளரவேண்டும் என்கிற நிலை தமிழகத்தில் இல்லை. அதிமுகவில் பாஜகவை பொன்னையன், செல்லூர் ராஜூ போன்றவர்கள் விமர்சித்திருக்கின்றனர். அதிமுகவின் தலைவர்களுக்கு யாரும் பதில் தரக் கூடாது என பாஜகவினரிடம் தெரிவித்திருக்கிறோம். அதிமுக தலைவர்களின் கருத்துகள் சொந்த கருத்துகள். அதிமுகவின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாட்டை ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும்தான் தெரிவிப்பர்.

ஊட்டத்து வழங்குவதில் முறைகேடு
தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட அம்மா நியூட்ரிசியன் கிட் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நியூட்ரிசியன் கிட் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இந்த நியூட்ரிசியன் கிட் தொகுப்பில் முதலில் ஆவின் ஹெல்த் மிக்ஸ் சேர்க்கப்படுவதற்கு முடிவு செய்யப்பட்டது. பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றின் ஹெல்த் மிக்ஸ் கொடுக்கப்பட்டது. தமிழக அரசின் நியூட்ரிசியன் கிட் தொகுப்பில் மீண்டும் ஆவின் ஹெல்த் மிக்ஸ் சேர்க்கப்பட வேண்டும்.

லோக்சபா தேர்தல்
நாடாளுமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டில் எந்த கட்சி பெரிய கட்சி என்பதற்கான தேர்தல் அல்ல. இது நமக்கு தெரியும். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் இப்போது வருமா என்பது தெரியாது. நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை அகில இந்திய அளவில் பிரதமர் நரேந்திர மோடி 400 இடங்களைப் பெற்று 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். ஆகையால் பாஜகவுடன் துணை நிற்கிற அனைவரது ஒத்துழைப்புடன் 400 எம்.பி இடங்களைத் தாண்ட வேண்டும். ஏனெனில் வலிமையான இந்தியா வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.











Click it and Unblock the Notifications