24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வினியோகம்.. மதுரை, சேலத்திற்கு பட்ஜெட்டில் ‘மெகா’ அறிவிப்பு
சென்னை: மதுரை மற்றும் சேலம் மாநகராட்சியில் 2024 - 2025 ஆம் நிதி ஆண்டில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் விநியோகம் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்என் ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததால், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கடந்த 15-ந் தேதி சட்டசபையில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்.

இந்தநிலையில் சட்டப்பேரவையில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும். சரியாக காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது அவர் காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் என்ற திருக்குறள் போல, நமது ஆட்சி நடந்து வருகிறது எனக்கூறி பட்ஜெட் உரையை தொடங்கினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:- நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் ஊரக பகுதிகளில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய சிறுபாசன ஏரிகள், குளங்கள் மற்றும் வரத்து கால்வாய்களை மேம்படுத்தி இயற்கையை மீட்டெடுக்கும் பெரும் முயற்சியாக 500 கோடி மதிப்பீட்டில் மக்கள் பங்களிப்போடு 5 ஆயிரம் நீர் நிலைகளை மேம்படுத்தும் பெரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
மதுரை, சேலம் மாநகராட்சியில் தடையற்ற குடிநீர் விநியோகம் விரிவுபடுத்தபடும் என்ற அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது. தங்கம் தென்னரசு இது தொடர்பாக கூறியதாவது:- தமிழ்நாட்டில் தற்போது ஈரோடு வேலூர் கடலூர் திருச்சிராப்பள்ளி தூத்துக்குடி திருநெல்வேலி திண்டுக்கல் தாம்பரம் நாகர்கோவில் காரைக்குடி ராஜபாளையம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 12 மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் சோதனை அடிப்படையில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கல் திட்டப் பணிகள் பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மதுரை மற்றும் சேலம் மாநகராட்சியில் 2024- 2025 ஆம் நிதி ஆண்டில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் விநியோகம் விரிவுபடுத்தப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications