இடைத் தேர்தலுக்கு ஆதரவு தாங்க.. திடீரென நேரில் வந்து கேட்ட அதிமுக.. டக்குன்னு ஓகே சொன்ன பாஜக!
Recommended Video
சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகள் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக பாஜக அறிவித்துள்ளது. பாஜகவின் ஆதரவை கோரி அமைச்சர் ஜெயக்குமார் இன்று அக்கட்சித் தலைவர்களை சந்தித்த பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வரும் 21-ந் தேதி நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் 12 வேட்பாளர்களும் நாங்குநேரியில் 23 பேரும் களத்தில் உள்ளனர்.
விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சியின் கந்தசாமி, தமிழ் பேரரசு கட்சியின் கவுதமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாங்குநேரியில் காங்கிரஸின் ரூபி மனோகரன். அதிமுகவின் நாராயணன், நாம் தமிழர் கட்சியின் ராஜநாராயணன் உள்ளிட்டோர் களம் காணுகின்றனர்.
நாங்குநேரி தொகுதியில் பாஜக போட்டியிட விரும்பியதாக கூறப்பட்டது. ஆனால் இரு தொகுதிகளிலுமே அதிமுகவே வேட்பாளர்களை நிறுத்தியது. இதனால் பாஜக அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
அதேநேரத்தில் தேமுதிக, பாமக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து அமைச்சர்கள் குழு அதிமுகவுக்கு ஆதரவு கோரியது. பாஜகவிடம் மட்டும் அதிமுக குழு ஆதரவு கேட்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று திடீரென பாஜக தலைமை அலுவலகத்துக்கு சென்ற அமைச்சர் ஜெயக்குமார், இடைத்தேர்தல்களில் அக்கட்சியின் ஆதரவை கோரினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், விக்கிரவாண்டி- நாங்குநேரி தொகுதிகளில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு தருகிறது.
இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக தேர்தல் பணியாற்றுவோம் என்றார்.