இமெயில் ஐடி தராவிட்டால்... வேட்பாளருக்கு பெரிய சிக்கல்.. தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு
சென்னை: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் உறுதிமொழிப் பத்திரத்தில் அனைத்து விவரங்களையும் முழுமையாகக் குறிப்பிட வேண்டும் என்றும், எந்தவொரு தகவல்களும் விடுபட கூடாது என்றும் தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இ-மெயில் முகவரி கொடுக்காவிட்டால் வேட்பாளர்களின் வேட்பு மனு நிராகரிப்பு செய்யப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றன. வரும் திங்கள்கிழமையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. எனவே அதற்குள் வேட்புமனு தாக்கல் செய்ய அனைத்து கட்சி வேட்பாளர்களும் ஆயத்தமாகி வருகிறார்கள்.

இந்நிலையில் வேட்பாளர் ஒருவர் தனது வேட்புமனுவுடன் இணைக்கும் உறுதி மொழி பத்திரத்தில் சொத்து - கடன் விவரங்கள், குற்றப் பின்னணி, நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள், தண்டனை விவரங்கள், கல்வித் தகுதி, பான் கார்டு, வருமான வரி விவரம், தொடர்பு விவரங்கள், சமூக ஊடகக் கணக்குகள் என அனைத்தையும் கட்டாயம் கொடுக்க வேண்டும்.
அதற்கிடையில் இ-மெயில் முகவரி கட்டாயம் கொடுக்க வேண்டும். அப்படி தெரிவிக்காமல் போனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. வேட்புமனுவில் குற்றவிவரங்களை மறைப்பதும் சிக்கலை ஏற்படுத்தும்.அதனால் தான் அனைத்து விவரங்களையும் வேட்பு மனுவில் வேட்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தேர்தல் கமிஷன் சுற்றறிக்கையில் கூறுகையில், "கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் வேட்பாளர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை முழுமையாக சமர்ப்பிப்பது சட்டப்பூர்வ கடமையாக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் பொறுப்பு தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்படும் உறுதிமொழிப் பத்திரத்தில், இ-மெயில் முகவரி உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் வேட்பாளர்கள் கட்டாயம் நிரப்ப வேண்டும்.
உறுதிமொழிப் பத்திரத்தில் ஏதேனும் ஒரு பகுதி நிரப்பப்படாமல் காலியாக இருந்தால், சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் நோட்டீஸ் வழங்க வேண்டும். அந்த நோட்டீசைப் பெற்றவுடன், அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய திருத்தப்பட்ட புதிய உறுதிமொழிப் பத்திரத்தை வேட்பாளர் தாக்கல் செய்ய வேண்டும். நோட்டீஸ் வழங்கப்பட்ட பின்னரும், முழுமையான விவரங்களுடன் கூடிய உறுதிமொழிப் பத்திரத்தைத் தாக்கல் செய்யத் தவறினால், வேட்புமனு பரிசீலனையின் போது அந்த வேட்பாளரின் மனு நிராகரிக்கப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications