ரொம்ப வேதனையா இருக்கு... நீட் மசோதாவ சீக்கிரம் அனுப்பி வையுங்க - ஆளுநருக்கு முதலமைச்சர் கடிதம்
சென்னை: நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு விரைந்து அனுப்பவைத்திட வலியுறுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.
7 தமிழர் விடுதலை, நீட் தேர்விலிருந்து விலக்கு உள்ளிட்ட தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 11 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் மக்களவையில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும், இதனால் அவரை திரும்பப்பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை
அண்மையில் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழ்நாட்டின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தியதுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்தும் புகாரளித்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை வைத்ததாக தகவல் வெளியானது.

ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து
இந்த நிலையில், தமிழ் புத்தாண்டான இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட நீட் விலக்கு தீர்மானம், ஏழு தமிழர் விடுதலை தீர்மானம் உள்ளிட்ட 11 தீர்மானங்களை நிறைவேற்றாத ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள மாட்டோம் என திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சிகள் அறிவித்தனர்.

தேநீர் விருந்துக்கு செல்லாத முதலமைச்சர்
இன்று காலை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோர் ஆளுநரை சந்தித்து பேசினர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்கம் தென்னரசு, ஆளூநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து இன்று மாலை ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி தலைமையில் தேநீர் விருந்து நடைபெற்றது.

பொழிவிழந்த தேநீர் விருந்து
இதில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை கலந்துகொண்டன. ஏற்கனவே அறிவித்தபடி தமிழக அரசு தரப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் யாரும் இதில் பங்கேற்கவில்லை. அதேபோல் புறக்கணிப்பதாக அறிவித்த கூட்டணி கட்சியினரும் இதில் கலந்துகொள்ளாததால் பொழிவிழந்து காணப்பட்டது.

முதலமைச்சர் ஆளுநருக்கு கடிதம்
இந்த நிலையில் ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நீட் விலக்கு குறித்து இருமுறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்ட போதும் நேரில் ஆளுநரைச் சந்தித்து இது குறித்து தான் பேசிய பின்னரும். நீட் தேர்வு மசோதா ஆளுநர் அவர்களால், இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற இந்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படாதது மிகுந்த வேதனையளிப்பதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் அளித்த வாக்குறுதி
மேலும் தான் நேரில் சந்தித்து இது குறித்து வலியுறுத்தியபோது ஆளுநர் அவர்கள் இம்மசோதா தன்னால் இந்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று உறுதியளித்ததையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருமுறை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டும், ஆளுநர் அவர்களிடம் இக்கோரிக்கையினை நேரில் வலியுறுத்திய பின்னரும், இந்நிகழ்வில் முன்னேற்றம் காணப்படாததால் இன்று தனது அமைச்சரவையின் இரண்டு மூத்த அமைச்சர்களை மாண்புமிகு ஆளுநரைச் சந்தித்து இக்கோரிக்கையினை மீண்டும் வலியுறுத்த கேட்டுக்கொண்டதாக முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறது.

தேநீர் விருந்தில் கலந்துகொள்ளாதது ஏன்?
அவர்களிடம் நீட் தேர்வுக்கான மசோதாவா ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்ற உறுதியான பதிலை ஆளுநர் அளிக்காத நிலையில் தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்பினையும் கருத்தில் கொண்டு இன்று ஆளுநர் மாளிகையில் வழங்கப்படும் தேநீர் விருந்தில் கலந்துகொள்வது முறையாக இருக்காது என்று தனது கடிதத்தில் முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

உறவு சுமூகமாக இருக்கும்
மாநில மக்களின் நலனை முன்னிறுத்தி, அரசியலமைப்புச் சட்டத்தின்படி இருவரும் தங்கள் கடமைகளை ஆற்றும் பொழுது மாநில மக்களும் மாநிலமும் வளம் பெறும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கும் மாநில அரசுக்குமான உறவு தொடர்ந்து இணக்கமாகவும், சமூகமாகவும் இருக்குமென்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications