போலீசார் தாக்கியதில் உயிரிழப்பு.. முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - மு.க.ஸ்டாலின்
சென்னை: போலீசார் தாக்கியதில் உயிரிழந்த வியாபாரி முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- சேலம் மாவட்டம் இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் நேற்று இரு சக்கர வாகனத்தில் சென்றபோது சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் மலையாள பட்டி கிராமத்தில் உள்ள வன சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஏத்தாப்பூர் காவல் துறையினர் அவர்களை தணிக்கை செய்துள்ளனர்.

லத்தியால் தாக்கினார்
அப்போது காவல் துறையினருக்கும், இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதன் விளைவாக ஆத்திரம் அடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவர் தனது லத்தியால் தாக்கியதில் முருகேசன் மயக்கமடைந்து சாலையில் விழுந்த நிலையில் அவரை தும்மல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்து பின்னர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஸ்டாலின் வேதனை
பின்னர் அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக இன்று காலை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்க சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர் முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த துயர செய்தியை அறிந்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார்.

ரூ.10 லட்சம் நிவராண நிதி
இந்த சம்பவத்தில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் முருகேசன் குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு அவரது குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் முதல்-அமைச்சர் பொது நிவராண நிதியில் இருந்து வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

குற்றவியல் வழக்குப்பதிவு
இந்த சம்பவத்துக்கு காரணமான ஏத்தாப்பூர் காவல்துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications