மக்கள் வைத்த நம்பிக்கை.. இன்னும் கூடுதலாக உழைப்போம்.. முதல்வர் ஸ்டாலின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து
சென்னை: நமக்கு பல வகையில் துன்பங்கள், இன்பங்கள் என்று கொட்டி கொடுத்த 2021-ம் ஆண்டு விடை பெற போகிறது. இன்னும் சில மணி நேரத்தில் புத்தாண்டு 2022 பிறக்க போகிறது. புத்தாண்டை கொண்டாட இந்தியா தயாராகி வருகிறது.
நள்ளிரவு கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள், வழிபாடுகள் நடைபெற உள்ளன. பிறக்கபோகும் புதிய ஆண்டு அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமைய வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் புத்தாண்டு வாழ்த்து கூறி வருகின்றனர்.
அஞ்சலகங்களில் இந்தி படிவங்களா? போராடி தமிழ் படிவங்களை கொண்டு வந்த திமுக எம்.பி. அப்துல்லா
மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து
இந்த நிலையில் தமிழக அரசு புத்தாண்டில் இன்னும் கூடுதலான செயலாற்றலுடன் மக்கள் நலனுக்கான பணிகளைத் தொடர்ந்திட உறுதிபூண்டுள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
பெரும் சவால்
இனிமை சூழ்ந்து - இன்னல் அகன்று, அனைத்து மக்களும் நலமும் வளமும் பெற்றிட நம்பிக்கையுடன் பிறக்கிறது 2022 ஆங்கிலப் புத்தாண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் கண்டு வரும் பேரிடர்ச் சூழல், மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது.
மக்கள் நலன்
இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்து, மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்படும் நமது அரசு, எதிர்வரும் புத்தாண்டில் இன்னும் கூடுதலான செயலாற்றலுடன் மக்கள் நலனுக்கான பணிகளைத் தொடர்ந்திட உறுதிபூண்டுள்ளது.
‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’
நமது அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையினை நிறைவேற்றும் வகையில் நிர்வாகச் செயல்பாடுகள் புத்தாண்டில் புதுப்பொலிவு பெறும். 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' எனும் மானுடத் தத்துவம் பாடிய பெருமைக்குரிய நமது தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் செழித்திடவும், உலகில் வாழும் மக்கள் யாவரும் பேரிடரைக் கடந்து நலன் பெற்றிடவும் விழைகிறேன். நமது அரசுக்கு உறுதுணையாக விளங்கிடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.