இனி "ஒன்றியம்" என்றுதான் அழைப்போம்.. பாஜக கேள்விக்கு முதல்வர் திட்டவட்ட பதிலடி.. சட்டசபையில் சுளீர்!
சென்னை: ஒன்றிய அரசு என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்துவது ஏன் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் விளக்கம் அளித்தார்.
Recommended Video
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்தே மத்திய அரசை ஒன்றிய அரசு என்றுதான் அழைத்து வருகிறது. இந்தியா என்பது மாநிலங்கள் சேர்ந்த ஒன்றியம் என்று அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. ஆங்கிலத்திலும் union அரசு என்றே சொல்லப்படுவதால் தமிழ்நாடு அரசும் ஒன்றியம் என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்துகிறது.
தமிழ்நாடு அரசும் முதல்வர் ஸ்டாலினும் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்துவது மாநில சுயாட்சிக்கான முழுக்கமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் இந்த சொற் பிரயோகத்தை பாஜக தலைவர்கள் பல இடங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர்.
கேள்வி
இந்த நிலையில் இன்று சட்டசபையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் "ஒன்றிய அரசு" என்ற வார்த்தையை தமிழ்நாடு அரசு பயன்படுத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். புதிதாக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்த வார்த்தையை மட்டுமே பயன்படுத்துகிறீர்கள். மத்திய அரசு என்று சொல்லாமல் ஒன்றிய அரசு என்று சொல்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
பதில்
இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், ஒன்றிய அரசு என்று சொல்வதை சிலர் குற்றம் போல பார்க்கிறார்கள். அது குற்றம் இல்லை. அரசியலமைப்பு சட்டத்தில் இப்படித்தான் இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதை மட்டுமே நாங்கள் பயன்படுத்துகிறோம். ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாச்சி தத்துவம் அடங்கி உள்ளது.
ஒன்றியம்
1957ம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே ஒன்றியம் என்ற வார்த்தை இருந்தது. அண்ணா, கருணாநிதி இந்த வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளனர். மாநிலங்கள் அனைத்தும் இணைத்து உருவான ஒன்றியம்தான் இந்தியா. இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும் இதுதான் உள்ளது.
இனி இப்படித்தான்
மத்திய அரசு இனி ஒன்றிய அரசு என்றுதான் அழைப்போம். இந்த வார்த்தையை மட்டுமே இனி பேட்டிகளில், அறிக்கைகளில் பயன்படுத்துவோம். இனி எப்போதுமே ஒன்றியம் என்றுதான் குறிப்பிடுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.