தமிழ்நாடு பயணிகள் எல்லோரும் வந்தபிறகுதான் நீங்க வரணும்.. உதயநிதி & டீமுக்கு ஸ்டாலின் போட்ட ஆர்டர்!
சென்னை : ஒடிசாவில் நடைபெற்ற கோர ரயில் விபத்து பற்றிய தகவல் அறிந்ததுமே ஒரு குழுவினரை தமிழ்நாட்டுக்கு அனுப்பிய முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து அப்டேட்களை கவனித்து வருகிறார். ஒடிசா சென்ற தமிழ்நாடு குழுவினருடன் நேற்று இரவு பேசிய முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு முக்கியமான ஆர்டரை பிறப்பித்துள்ளார்.
ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளை செய்திடவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்திடவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் ஒரு குழுவினர் ஒடிசா சென்றனர்.

போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், மற்றும் ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் ஒடிசா அனுப்பி வைக்கப்பட்டனர்.
அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் மற்றும் பணீந்திர ரெட்டி ஆகியோர் விபத்து நடந்த பாலசோர் என்ற இடத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை கண்காணித்து உதவி செய்தனர். மற்றொரு குழுவான குமார் ஜெயந்த் ஐஏஎஸ், அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் ஆகியோர் ஒடிசாவில் இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் ரயில் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்களை சேகரித்து வந்தனர்.
அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் நேற்று மாலை, ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளின் பாதுகாப்பு, மீட்புப் பணிகள் மற்றும் மருத்துவ உதவிகள் குறித்து கலந்துரையாடினர். தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டுகோள் விடுத்தனர்.
பின்னர், நேற்று இரவு ஒடிசா சென்ற தமிழ்நாடு அரசின் குழுவினருடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ கால் வழியாக ஆலோசனை நடத்தினார். அப்போது, ஒடிசா இரயில் விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளோர் குறித்தும், மீட்புப் பணிகளின் நிலவரங்கள் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் கேட்டறிந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், பாலசோர் அரசு மருத்துவமனைக்குச் சென்று, விபத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களைப் பார்த்து வந்ததாகவும், ஆனால் அந்த மருத்துவமனையில் தமிழ்நாட்டைச் நேர்ந்த எவரும் இதுவரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்தனர்.
மேலும், கட்டாக்கில் உள்ள எஸ்.வி.பி. மருத்துவமனையில், விபத்தில் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்களை சேகரித்து வருவதாகவும், தற்போது வரை அந்த மருத்துவமனையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எவரும் இல்லை எனத் தெரிய வந்துள்ளதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
பாலசோர் நகரத்தில் உள்ள 4 இடங்களில், விபத்தில் இறந்த 237 நபர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 70 சடலங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எவரும் இல்லை என்று அங்குள்ள மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஒடிசா சென்ற தமிழ்நாடு குழுவினர் தெரிவித்தனர்.
தென்னக இரயில்வேயின் பயணிகளின் முன்பதிவுப் பட்டியல்படி, விபத்தில் சிக்கிய ரயில்களில் பயணம் செய்தவர்களின் விவரங்கள், அவர்களது உறவினர்களிடம் சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. சென்னையில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையுடன் நேரடியாக தொடர்பில் இருந்து, பயணிகளின் உறவினர்கள் மூலம் பெறப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து, அடையாளம் காணும் பணிகளை தொடர்ந்து வருகின்றனர்.
ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு குழுவினர் தெரிவித்த கருத்துகளையும், அப்டேட்களையும் உன்னிப்பாக கேட்ட முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் தலைமையில் ஒடிசா சென்றுள்ள குழுவினர், மேலும் சில நாட்கள் அங்கு தங்கியிருந்து, தமிழ்நாட்டைச் நேர்ந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக சென்னை வந்தடைவதை உறுதி செய்திட வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications