குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி
சென்னை: திமுக கூட்டணியில் குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு இப்போது, அந்த தொகுதிகளை பிரித்துக் கொள்ள தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் அடித்துக் கொள்கிறார்கள் என்று பீட்சா பட கார்டூன் ஒன்றை பதிவிட்டு பிரவீன் சக்கரவர்த்தி விமர்சித்துள்ளார். நேற்று ஜோதிமணி எம்பி காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை என குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியில் கட்சிகள் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் அறிவிப்பு என பிசியாகி உள்ளன. எப்போதும் மற்ற கட்சிகளுக்கு முன்னதாகவே திமுக தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி இருக்கும்.

தேமுதிகவுக்கு 10 தொகுதிகள்
ஆனால் இந்த தேர்தலில் திமுக தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து இன்னும் வேட்பாளர்கள் அறிவிப்பினையே வெளியிடவில்லை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை அதிக கூட்டணிக் கட்சிகள் திமுகவில் இணைந்ததே இதற்கு முதன்மையான காரணமாக பார்க்கப்படுகிறது. மொத்தம் 26 கட்சிகள் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் முதல் முறையாக இதில் விஜயகாந்தின் தேமுதிகவும் இணைந்து இருக்கிறது.
தேமுதிகவுக்கு திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அந்த 10 தொகுதிகள் எதை கொடுக்க வேண்டும் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறதாம். திமுக கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகளை தேமுதிக கேட்பதால் இந்த இழுபறி நீடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் கிளியூர் தொகுதியை கொடுக்காமல் திமுக போட்டியிட விரும்புகிறதாம்.
பிரவீன் சக்கரவர்த்தி போட்ட கார்டூன் படம்
ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதி என்பதால் காங்கிரசும் இதை கொடுக்க முன்வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க திமுகவுக்கு ஆதரவாக இருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் அவர்கள் சொல்வதை அப்படியே கேட்டுவிட்டு மற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பொறுப்பு கொடுப்பதில்லை என கூறி வருவதாக சொல்லப்படுகிறது.
இப்படி இருக்கும் போது தான் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பரபரப்பு ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில், காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை.. விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது என ஆதங்கம் தெரிவித்து இருந்தார்.
ஜோதிமணி எம்பி இவ்வாறு கூறியிருந்த நிலையில் அதை ஆதரிக்கும் விதமாகவே காங்கிரஸ் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தியும் இது தொடர்பாக கார்டூன் படம் ஒன்றை பதிவிட்டு ட்வீட் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதிக சீட்கள் பெற்றிருந்தால் இப்போது இந்த நிலமையே வந்திருக்காது என்பதை கூறும் வகையில் அவரது கார்டூன் படம் இருந்தது.
அதிக சீட் கொடுத்திருந்தால்..
அதில், பீட்சா துண்டுகளை குடும்பத்தினர் ஷேர் செய்து சாப்பிடுவது போல் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு படத்தில் பீட்சா துண்டுகள் குறைவாகவும் அதில் பீட்சாவை ஷேர் செய்வதில் குடும்பத்தினர் இடையே போட்டா போட்டி நடப்பது போன்றும், இன்னொரு படத்தில் பீட்சா துண்டுகள் அதிகமாக இருக்கும் வகையில் வரையப்பட்டு, அதில் உள்ள குடும்பத்தினர் எந்தவித குழப்பமுன் இன்றி அமைதியாக ஆளுக்கு ஒரு துண்டினை எடுத்து சாப்பிடுவது போன்றும் அந்த கார்டூன் படம் இருந்தது. அதாவது சீட் அதிகமாக இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்கிறாது என்றும், காங்கிரசுக்கு சீட்கள் குறைக்கப்பட்டதால் தான் இப்படி காங்கிரசுக்குள்ளேயே போட்டி ஏற்படுகிறது என்பதை வெளிக்காட்டும் விதமாக பதிவிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் இருந்தே திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி சலசலப்பு நீடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. எனினும் இன்று மாலைக்குள் தொகுதி பங்கீடு முடிவடைந்து வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி திமுகவில் கூட்டணி கட்சிகளில் காங்கிரசை தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டுவிட்டதாக டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications