அதிமுகவிடம் 57 தொகுதிகளை கேட்கும் பாஜக? 57 பொறுப்பாளர்கள் வராங்களாம்.. பிஎல் சந்தோஷ் சொன்ன தகவல்!
சென்னை: தமிழக பாஜகவின் தேர்தல் பணிகளுக்காக வெளி மாநிலத்தைச் சேர்ந்த 57 பொறுப்பாளர்களை நியமிக்க உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. இந்த 57 பொறுப்பாளர்களும் அந்தந்த தொகுதிகளிலும் நிலவும் உண்மையான நிலவரத்தை கட்சித் தலைமைக்கு ரிப்போர்ட்டாக அனுப்ப உள்ளதாக சொல்லப்படும் சூழலில், அதிமுகவிடம் மொத்தமாக 57 தொகுதிகளை பாஜக கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. நேற்று பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தேர்தல் பணிகளுக்கான 57 தொகுதிகளில் வெளி மாநில பொறுப்பாளர்களை பாஜக களமிறக்க உள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றது. இம்முறை இரட்டை இலக்கத்தில் சட்டசபை உறுப்பினர்களை அனுப்ப வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் உண்மை நிலவரங்களை ஆராய்ந்து உடனடியாக டெல்லி மேலிடத்திற்கு ரிப்போர்ட் அனுப்பும் வகையில் 57 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே பாஜக நடத்திய ஆய்வில் அக்கட்சிக்கு சாதகமான 75 தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டு, அதில் 57 தொகுதிகள் தேர்வு செய்துவிட்டது.
இந்த 57 தொகுதிகளிலும் வடமாநில பொறுப்பாளர்கள் தேர்தல் முடியும் வரை முகாமிட்டு பணிகள் செய்ய உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி நிர்வாகிகளை தயார் செய்து அவர்களுடன் கலந்துரையாடுதல் மற்றும் கமிட்டி இல்லாத இடங்களில் புதிய அமைப்புகளை உருவாக்குவது, வாக்குச்சாவடி வாரியாக சாதக பாதக அம்சங்களை ஆராய்ந்து உடனடியாக மேலிடத்திற்கு ரிப்போர்ட் அனுப்ப உள்ளனர்.
இதனால் அதிமுக கூட்டணியில் 57 தொகுதிகளை பாஜக கைப்பற்ற உள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையில் இருந்தே அமமுக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுக்கு சீட் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் பிஎல் சந்தோஷ் மற்றொரு முக்கிய தகவல் ஒன்றையும் பேசியுள்ளார். அதாவது வெளி மாநில பொறுப்பாளர்கள் அனைவரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறி இருக்கிறார். இதன் காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படலாம் என்று பாஜக வட்டாரங்கள் பேச்சுகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications