எங்கண்ணன் தான் அடுத்த எம்ஜிஆர்.. 1977 ரிட்டர்ன்ஸ்! எக்ஸிட் போல் வந்த பிறகும் அடங்காத தவெகன்ஸ்
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுகவை மீண்டும் ஆட்சி அமைக்கும் என்கின்றன. டைம்ஸ் நவ், ஜேவிசி உள்ளிட்ட நிறுவனங்கள் அதிமுக ஆட்சி அமைக்கும் என்கின்றன. இந்த நிலையில் காமக்யா மற்றும் ஆக்சிஸ் மை இந்தியா உள்ளிட்டவை 90 சீட்டுகளுக்கு மேல் தமிழக வெற்றிக் கழகம் பெறும் என கணித்துள்ளன. இதை அடுத்து சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர். அடுத்த முதல்வர் விஜய் தான் எனவும், 1977-ல் ஏற்பட்டது போல ஆட்சி மாற்றம் தமிழகத்தில் ஏற்படும் என சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை அறிவித்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில் மே நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுகவே ஆட்சி அமைக்கும் என்கின்றனர். பீப்புல்ஸ் பல்ஸ், மேட்ரிக்ஸ், அக்னி நியூஸ், ரிபப்ளிக் பி மார்க், நியூஸ் 18 உள்ளிட்ட நிறுவனங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் திமுக 120 முதல் 125 தொகுதிகள் வரை வென்று ஆட்சி அமைக்கும் என்கின்றன.
மேட்ரிக்ஸ், சிஎன்என் நியூஸ் 18, ஸ்பைக் மீடியா உள்ளிட்டவை 120 முதல் 127 சீட்டுகள் வரை வென்று அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்கின்றன. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த தேர்தலில் தனித்து களம் கண்ட நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் நான்கு முதல் 25 சீட்டுகள் வரை பெறும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. அதிமுக ஆட்சி அமைக்கும் என சொல்லும் நிறுவனங்கள் கூட நான்கு முதல் 15 சீட்டுகள் வரை தமிழக வெற்றி கழகம் பெறலாம் என்கின்றன.
அதே நேரத்தில் இரண்டு நிறுவனங்கள் விஜய்க்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கணித்திருக்கின்றன. ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் 98 முதல் 120 சீட்டுகள் வரை தமிழக வெற்றிக்கழகம் பெறும் என்கிறது. அதே நேரத்தில் ஸ்பைக் மீடியா நிறுவனம் 67 முதல் 91 சீட்டுகள் வரை தமிழக வெற்றிக்கழகம் பெறும் என்கிறது. அதே நிறுவனத்தின் கணிப்பின்படி 78 முதல் 95 சீட்டுகள் வரை திமுகவும், 68 முதல் 84 வரை அதிமுகவும் பெறும் என்கின்றன. இதனால் தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அந்த ஒரு நிறுவனம் மற்றும் கணித்துள்ளது.
இந்த நிலையில் மற்ற கருத்துக்கணிப்புகள் எல்லாம் கருத்து திணிப்புகள் எனவும் ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு மட்டுமே உண்மை எனவும் தமிழகத்தில் அடுத்த முதலமைச்சர் ஆக விஜய் தான் பொறுப்பேற்க போகிறார் என கொண்டாடி வருகின்றனர் தமிழக வெற்றிக்கழகத்தின். தவெக ஒற்றை இலக்கத்தில் கூட சீட்டுகளை பெறாது என திமுகவும் அதிமுகவும் சொல்லி வந்த நிலையில் தற்போது இரண்டு இலக்க சீட்டுகள் பெறும் என பெரும்பாலான கருத்துக்கணிப்பு கூறியிருப்பதும் அந்த கட்சித் தொண்டர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
குறிப்பாக விஜய் ஆட்சி அமைப்பார் என்ற ஆக்ஸிஸ் மை இந்தியாவின் கருத்துக்கணிப்பை வைத்து 1977 இல் ஏற்பட்டது போல தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போகிறது. எம்ஜிஆரை போல சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விஜய் தமிழகத்தின் முதல்வராக முடிசூட போகிறார் எனக் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக இருப்பதால் திமுகவினரும் கொண்டாடி வருகின்றனர். அதிமுக மட்டுமே அமைதி காத்து வருகிறது. கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், அரசியல் பிரபலங்களின் புள்ளி விவரங்கள் என பல முனை தகவல்கள் தற்போது உலாவரும் நிலையில் அரியணை யாருக்கு? என்ற கேள்வி மே நான்காம் தேதி தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications