"என் கடைசி ஆசை.. அதையும் நிராகரிச்சிட்டாங்க".. விஆர் வாங்க காரணம் இதுதானாம்.. சகாயம் வேதனை..!
விருப்ப ஓய்வு குறித்து சகாயம் ஒரு பேட்டி தந்துள்ளார்
சென்னை: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ஏன் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து விஆர் வாங்கி கொண்டார் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.. இதற்கான காரணத்தை சகாயமே தெரிவித்துள்ளார்!
டெல்லியில் ஆண்டாண்டு காலமாக பாஜக, காங்கிரஸ் என 2 கட்சிகளும் மாறி மாறி ஆட்சியை யாருக்கும் விடாமல் பங்கு போட்டு கொண்டிருந்தபோது, இரண்டையுமே துடைப்பத்தால் அடித்து விரட்டி முதல்வர் ஆனார் கெஜ்ரிவால்.. அதுபோலவே இங்கு சகாயத்தை நம் மக்கள் பார்க்கின்றனர்!

பரம்பரை அரசியல், வாரிசு அரசியல், நன்கொடை, இலவசம் என்ற பெயரில் கருப்பு பணம், பணம் தந்தால் மட்டுமே வேட்பாளர் பதவி, ஓட்டுக்கு பணம், இப்படி புளித்து.. சலித்து போன அரசியல் இல்லாத ஒரு மாற்றத்தை சகாயம் உருவாக்குவாரா? என்று மக்கள் நம்புகிறார்கள்.. சகாயம் மீது எப்பவுமே இளைஞர்களுக்கு தனி மரியாதை உண்டு!
காரணம், நேர்மைக்கு பெயர் போன அரசு அதிகாரி.. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.. சொத்துக் கணக்கை வெளியிட்ட முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற சிறப்புக்குரியவர்.
இப்படி அடுத்தடுத்த அதிரடிகளால் தமிழக அரசுக்கு சில தர்மசங்கடங்கள் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது. அத்துடன் சகாயம் ஐஏஎஸ்-க்கு கடந்த 7 வருஷமாகவே தமிழக அரசு முக்கிய பதவிகளை வழங்கவில்லை என்றும், அதனாலேயே அவர் கடுமையான மனஉளைச்சலில் இருந்ததாகவும் செய்திகள் கசிந்தபடியே வந்தன.
இந்தநிலையில் சகாயம் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி விருப்ப ஓய்வுக்கோரி விண்ணப்பித்திருந்தார். அப்போதே இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை தந்தது.. திட்டமிட்டே தொடர்ந்து சில சங்கடங்களை தமிழக அரசு ஏற்படுத்தியதால், பதவியிலிருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்துவிட்டார் என்று சிலர் கருத்து சொன்னார்கள்.
ஆனால், அவரது பணி காலம் முடிய இன்னும் 3 வருஷங்கள் இருக்கின்றன.. எனினும் இந்த விருப்ப ஓய்வு கேட்டிருந்த நிலையில், விண்ணப்பித்த சகாயத்தின் அவகாசம் ஜனவரி 2-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் நேற்று முறைப்படி அவர் அரசுப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து ஒரு தொலைக்காட்சி பேட்டியில், எதற்காக விருப்ப ஓய்வு பெறுகிறீர்கள் என்று சகாயத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு, "நான் வருத்தத்தில் இருக்கிறேன்.. நேர்மையாக செயல்பட்ட என்னை ஏன் விருப்ப ஓய்வு பெறுகிறீர்கள் என்று ஒருமுறைகூட நேரில் அழைத்து பேசவில்லை... நான் அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளில் விருப்ப ஓய்வு பெறுவதற்கு விண்ணப்பிக்கும் பொழுது ஒரு கோரிக்கையை தமிழக அரசிடம் வைத்தேன்.
ஜனவரி 31-ம் தேதி காந்தி மறைந்த தினத்தில் தனக்கு விருப்ப ஓய்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன். இந்த கோரிக்கையை கூட தமிழக அரசு நிராகரித்துள்ளது... அதற்கு முன்னதாகவே விடுவித்துள்ளது" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications