ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.2 ஆயிரம்.. அரசாணை வெளியீடு: விருதுநகர் கலெக்டர்
ஊராட்சி மன்ற தலைவருக்கான சம்பளம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
சென்னை: விருதுநகர் மாவட்டம் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அதில், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்..

விளக்கம்
அதாவது அந்த தொகை மூலம் 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஊராட்சி மன்ற தலைவர்கள் பயன்பெறுவார்கள் என்பதை அமைச்சர் விளக்கமாக எடுத்துரைத்தார்.. மேலும், சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்படும் என்றும் சிறப்பாக செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படும் எனவும் அமைச்சர் பெரியகருப்பன் கூறியிருந்தார்.

எம்எல்ஏக்கள்
ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமான வெறும் 2 ஆயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு எப்படி அவர்களால் செயல்பட முடியும்? எனவே செயல்பட வேண்டும் என்றால் தவறான வழியில் எடுக்கலாம்... எம்எல்ஏக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது, இது கவுரவமான சம்பளம், அதுபோல ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்பட்டால் மொத்தமுள்ள 12,525 பேரில் சில ஆயிரம் பேராவது நேர்மையாக செயல்பட வாய்ப்புள்ளது என்பன போன்ற விவாதங்கள் நிலவி கொண்டுதான் உள்ளன.

திட்டங்கள்
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் ஒரு செய்திக்குறிப்பும் வெளியிட்டுள்ளார்.. அதில், "கிராம ஊராட்சிகளில் கிராம ஊராட்சி தலைவர்கள் அவ்வூராட்சியின் நிர்வாக அலுவலர் என்கிற முறையில் கிராம ஊராட்சியில் நடைபெறும் மாநில அரசு திட்டங்கள் மற்றும் ஒன்றிய அரசு திட்டங்கள் ஆகியவற்றை முழுமையாக செயல்படுத்தும் முக்கிய பொறுப்பில் உள்ளனர்.

அரசாணை
ஊராட்சிகளால் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பணிகளான குடிநீர் வழங்குதல், தெருவிளக்கு பராமரித்தல், சாலை வசதிகள் ஏற்படுத்துதல், சுகாதாரத்தினை மேம்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டு வருவதால், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதிய தொகையினை ரூபாய் 1,000 லிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசாணை (நிலை) எண் 132 நாள் : 15.11.2021 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications