பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு! 1000 ரூபாய் பணம் மிஸ்ஸிங்.. குடும்ப தலைவிகள் குழப்பம்! என்னாச்சு?
சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என அரசு அறிவித்திருக்கிறது. அதே நேரத்தில் பணப்பரிசு தொடர்பாக எந்த தகவலும் இடம்பெறாதது குடும்பத் தலைவர் தலைவிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கப்படுவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அனைத்து வகையான ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டும் அல்லாமல் வழக்கமாக வழங்கப்படும் இலவச வேட்டி சேலை உள்ளிட்டவையும் ரேசன் கடைகளுக்கு அனுப்பப்படவுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு:
அதில்," 2025-ஆம் ஆண்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்கிட தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை:
தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. 2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இலவச வேட்டி சேலை:
இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு. அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன." என கூறப்பட்டுள்ளது.
ரொக்க பரிசு:
இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் பணப்பரிசு வழங்குவது தொடர்பான அறிவிப்பு இல்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் 500 ரூபாய் முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பரிசும் வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக 2021 இல் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய், அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
மக்கள் ஏமாற்றம்:
தொடர்ந்து திமுக ஆட்சி அமைந்த பிறகு 2022 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்று வழங்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் கொக்க பரிசு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டும் ரொக்க பரிசு வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் குழப்பம் அடைந்திருக்கின்றனர். இதற்கிடையே பொங்கல் பரிசு வழங்குவது குறித்து விரைவில் தனியாக அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications