இருளர் இன மக்களுக்கு இனிப்பான செய்தி.. பாம்பு பிடிக்க அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை
சென்னை: இருளர் இன மக்கள் பாம்புகளை பிடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இருளர் பழங்குடியின மக்கள் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வசித்து வருகிறார்கள். இவர்களின் வாழ்வாதாரம், வேட்டையாடுவது, பாம்பு பிடிப்பது, மீன் பிடிப்பது போன்ற தொழில்களை செய்து வந்தனர்.
யார் வீட்டில் பாம்பு நுழைந்துவிட்டாலும் சரி இவர்களுக்கு தகவல் கிடைக்கப்பெற்று அந்த பாம்பை லாவகமாக பிடிப்பார்கள். இவர்கள் எப்படி பாம்பு பிடிப்பார்கள் என்பது ஜெய்பீம் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

காசு
இதன் மூலம் அந்த வீட்டில் கொடுக்கும் காசுதான் இவர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தது. ஒரு சில இடங்களில் இருளர் பழங்குடியின பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டு இந்த சங்கத்தில் பதிவு செய்தவர்கள் பாம்பு பிடித்து வந்தனர். அவ்வாறு இவர்கள் பிடிக்கும் பாம்பை சங்கத்திடம் ஒப்படைப்பர்.

பாம்பு விஷம்
அந்த பாம்பிலிருந்து எடுக்கும் விஷத்தை அரசின் உதவியுடன் ஆராய்ச்சி மையத்திற்கு வழங்கி வந்தனர். இந்த நிலையில் பல்லுயிர் இனப்பெருக்கம் காரணமாக வன உயிரின சட்டத்தால் பாம்பு பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான இருளர் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.

4 ஆண்டுகள்
இதனால் தங்களுக்கு பாம்பு பிடிக்க அனுமதி வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இதனால் பாம்பு பிடிப்போர் சங்கம் உள்ள கட்டடத்திற்கும் தேவையின்றி வாடகை கொடுத்து வருவதாக வேதனை தெரிவித்திருந்தனர்.

தமிழக அரசு அனுமதி
மேலும் தமிழக அரசு காலதாமதமின்றி பாம்பு பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்திருந்தனர். இந்த நிலையில் இருளர் இன மக்கள் பாம்புகளை பிடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது. இதனால் இருளர் இன மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications