அரசு ஊழியர்கள் போராட்டத்தை ஏறத்தாழ முடிவுக்கு கொண்டுவந்த அரசு.. அடுத்தடுத்து செய்த அதிரடி மூவ்கள்!
Recommended Video
சென்னை: தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டம் ஏறத்தாழ முடிவுக்கு வந்துள்ளது. அரசு எடுத்த அடுத்தடுத்த நடவடிக்கைகள் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 22-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஊழியர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க முடியாது என கூறிவிட்டது. அரசின் வருவாயில் 71 சதவீதத்திற்கும் மேல், அரசு ஊழியர்களின் ஊதியத்திற்கே செல்வதாக நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்கமாகவே கூறினார்.
இது இறுதிப்போர்.. போராட்டம் வாபஸ் இல்லை... வெகுண்டெழுந்த ஜாக்டோ ஜியோ அமைப்பு
மக்கள் ஆதரவு
சம்பள உயர்வு மற்றும் பென்ஷன் போன்றவற்றை முன்னிறுத்தியே அரசு ஊழியர்கள் போராடுவதாகவும், இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கினால் மக்களிடம் கூடுதல் வரி வசூலிக்க வேண்டும் என்பதை போலவும் ஒரு தோற்றத்தை அமைச்சர்கள் தொடர்ச்சியாக மக்கள் முன்பாக கொண்டு சென்றனர். இதுபோன்ற பேட்டிகளால், அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு கிடைக்காமல் போய்விட்டது. சமூக வலைத்தளங்களில் அரசு ஊழியர்கள் போராட்டங்களுக்கு எதிராக அதிகப்படியான கருத்துக்களை நெட்டிசன்கள் முன்வைத்து வந்தது இதற்கு நல்ல உதாரணம்.
9 அம்ச கோரிக்கைகள்
9 அம்ச கோரிக்கைகளை படித்து பாருங்கள் மக்களே.. எங்கள் நோக்கம் ஊதிய உயர்வு கிடையாது என அரசு ஊழியர்கள் என்னதான் கூறினாலும், அந்த வார்த்தைகள் மக்கள் செவிகளை எட்டவில்லை. இது அரசுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். போராடும் அரசு ஊழியர்களை, பொதுமக்கள் எதிரிகளைப்போலத்தான் பார்த்தனரே தவிர, அவர்கள் கோரிக்கைகள் குறித்து, பரிசீலிக்க அரசை போலவே, பொதுமக்களும் தயாராக இல்லை.
ஆசிரியர்கள்
பொதுமக்கள் ஆதரவு இல்லாவிட்டாலும், அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்ந்தது. பொதுத் தேர்வு நெருங்கும் நிலையில், பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் பணி பாதிக்கப்பட்டது. இதனால் அரசு அடுத்த அதிரடி நடவடிக்கையை கையில் எடுத்தது. ஆம்.. அதிலும் ஆசிரியர்களுக்கு அரசின் கரங்கள் இன்னும் நெருக்கடி கொடுத்தன.
தற்காலிக ஆசிரியர்கள்
ஏற்கனவே 1,117 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மேலும் 602 பேர் பணியிடை நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தாலும் அவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுத்து வேறு பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்ற அடுத்த குண்டு வீசப்பட்டது. தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் ஆரம்பிக்கப்பட்டது. 1 லட்சம் பேர் இந்த பணிகளுக்கு விண்ணப்பங்களை கொடுத்தனர்.
போராட்டம் முடிவுக்கு வந்தது
இதுமட்டுமா, செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் இடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அச்சமடைந்த ஆசிரியர்கள் பலரும் பணிக்கு திரும்பியுள்ளனர். தமிழகம் முழுக்க 95 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். சென்னையில் 4 ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு வரவில்லையாம்.
எடப்பாடி அரசின் நடவடிக்கைகள்
மதுரையில் நேற்று 1000 பேர் சாலைகளில் அமர்ந்து போராடிய நிலையில் இன்று அந்த எண்ணிக்கை வெறும் 30ஆக குறைந்துள்ளது. போராட்டம் நடத்தி வருவோர், தாங்கள் போராட்டத்தை தொடருவோம் என அறிவித்தாலும்கூட அது சொற்ப அளவுதான். ஒரே கையெழுத்தில் ஒரு லட்சம் அரசு பணியாளர்களை பணி நீக்கம் செய்தவர் ஜெயலலிதா. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அரசு அதுபோல ஒரேயடியாக அதிரடி செய்யாவிட்டாலும், காரியத்தை சாதித்துவிட்டது. அந்த வகையில் எடப்பாடி அரசின் அடுத்தடுத்த மூவ்கள் வெற்றியை ஈட்டித் தந்துவிட்டன என்றுதான் கூற வேண்டும். அதேநேரம் அரசு ஊழியர்களின் 9 அம்ச கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது நடுநிலையாளர்கள் கருத்தாக உள்ளது.