ரோடு ஷோக்களுக்கு அனுமதி இல்லை.. சென்னை ஐகோர்ட்டில் சொன்ன தமிழக அரசு.. நீதிபதி போட்ட உத்தரவு!
சென்னை: தவெக தலைவர் விஜய் கூட்டங்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக கூறி தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்துவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுக்கும் வரை ரோடு ஷோ நடத்த அனுமதி கிடையாது என தமிழ்நாடு அரசு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம் 27 ஆம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வரை, அரசியல் கட்சிகளின் சாலை பிரச்சாரம், ரோடு ஷோக்களுக்கு அனுமதி இல்லை என்று ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோட் ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வு இன்று விசாரித்தனர். விஜய் பரப்புரைக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக கூறி தவெக தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ள வழக்கும் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணை நடத்தினர்.
கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் தங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் தவெக தரப்பு வாதம் வைத்துள்ளது. சில கட்சிகளுக்கு 11 நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. சில கட்சிகளுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படுவதில்லை என த.வெ.க தரப்பு வாதம் வைத்துள்ளது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "எந்தக் கட்சியும் பொதுக்கூட்டம் நடத்துவதை தடுக்கவில்லை. வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் வரை ரோடு ஷோக்களுக்கு அனுமதி இல்லை. அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்துகளை பெற்று விரைவில் விதிமுறைகள் வகுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
விதிகளை வகுக்கும் வரை ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லை என்பது அரசியல் கட்சிகளின் உரிமைகளை பறிப்பது ஆகாதா என கேள்வி எழுப்பிய சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, ரோடு ஷோ தொடர்பான விதிமுறைகள் வகுப்பதை அரசு விரைந்து முடிக்க வேண்டும், 10 நாட்களில் விதிகளை வகுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications