சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ரெடியா? நிறுவனங்களை தேர்வு செய்ய டெண்டர் கோரிய அரசு!
சென்னை: நான் முதல்வன் திட்டத்தில் மத்திய அரசு பணி தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய டெண்டர் கோரியுள்ளது தமிழக அரசு.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டங்களில் ஒன்று “நான் முதல்வன்” திட்டம். மாணவர்களை நுழைவுத் தேர்வுகளுக்கு தயார் செய்யவும், போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யவும் தமிழக அரசின் சார்பில் நிதி உதவியுடன் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஏராளமானோர் பயன்பெறத் தொடங்கியுள்ளனர்.

2024-2025-ம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின்படி பயிற்சி நிறுவனங்களை தேர்வு செய்ய டெண்டர் தமிழ்நாடு அரசு கோரி உள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கி தேர்வுகளுக்கு 6 மாத இலவச உண்டு, உறைவிட பயிற்சி தரப்பட உள்ளது.'நான் முதல்வன்’ திட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கான தனி பிரிவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை தமிழக இளைஞர்கள் எளிதாக அணுகும் வகையில் பல பயிற்சி திட்டங்களை இந்த பிரிவு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், 'ஒன்றிய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கிப் பணி ஆகிய தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படும்’ என்று 2024-25-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை மண்டலத்தில் மையத்தில் ஒன்றிய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே போட்டி தேர்வுக்காக 300 பேருக்கு உண்டு, உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படவுள்ளது. மதுரை மற்றும் கோவை மையத்தில் தலா 350 பேருக்கு வங்கிப் பணி தேர்வுக்கு உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் இந்த பயிற்சி அளிப்பதற்கான பயிற்சி நிறுவனங்களை தேர்வு செய்ய தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் டெண்டர் கோரி உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பயிற்சி நிறுவனங்கள் ஜூலை 12ஆம் தேதி மாலை 3 மணிக்குள் இணையதளம் மூலமாக டெண்டர் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின்கீழ் இயங்கி வரும் 'நான் முதல்வன்’ போட்டித் தேர்வுகள் பிரிவின் மூலம் கட்டணமில்லா உறைவிட பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இதில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் வங்கிப் பணி தேர்வு அல்லது மத்திய பணியாளர் தேர்வாணையம் மற்றும் ரயில்வே தேர்வு, இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு பயிற்சி பெற முடியும்.












Click it and Unblock the Notifications