“டிரைனிங்” தரும் தமிழ்நாடு அரசு.. ஜிஎஸ்டி வரி பற்றி இன்னும் புரியலயா? ஆன்லைனில் அரிய வாய்ப்பு
சென்னை: சரக்கு மற்றும் சேவை வரி, மின் வழிச் சீட்டு, அடிப்படை கணக்குகளின் விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள் குறித்த 3 நாள் ஆன்லைன் பயிற்சியை தமிழ்நாடு அரசு வழங்க இருக்கிறது. இந்த பயிற்சி எப்போது நடைபெறும்? விரிவாக பார்ப்போம்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாடு முழுவதும் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தியது. அதன் அடிப்படையிலேயே தற்போது வரிகள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தொழில் முனைவோர்கள், சிறு குறு வணிகர்கள் பலருக்கு ஜிஎஸ்டி குறித்த புரிதலும், அதன் கணக்கீடு முறையும் முழுமையாக தெரியவில்லை.

இதன் காரணமாக பல ஆயிரங்களை செலவு செய்து தனியார் நிறுவனங்களை அணுகும் சூழல் உள்ளது. இந்த நிலையில்தான் ஜிஎஸ்டி குறித்தும், ஈ பில்லிங் எனப்படும் மின் வழிச்சீட்டு குறித்தும் புத்தாக்க பயிற்சியை தமிழ்நாடு அரசு ஆன்லைன் வாயிலாக வழங்க உள்ளது. இதில் கலந்துகொண்டு பயனடையலாம். தொழில்முனைவோருக்கும் ஜிஎஸ்டி சார்ந்த தொழில் செய்வோருக்கும் இப்பயிற்சி பெரும் பயனளிக்கும்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் செய்திக்குறிப்பில், "தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னை, பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு " குறித்த இணையவழி பயிற்சி (3 நாட்கள்) பயிற்சியினை வரும் 03.05.2023 தேதி முதல் 05.05.2023-ம் தேதி வரை (காலை 10.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை) வழங்க உள்ளது.
இப்பயிற்சியில் சரக்கு மற்றும் சேவை வரி, மின் வழிச் சீட்டு' & அடிப்படை கணக்குகள், விதிமுறைகள், மற்றும் ஆவணங்கள் போன்றவை குறித்து பயிற்றுவிக்கப்படும். மேலும், இப்பயிற்சியில் அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.
முன்பதிவு அவசியம்:
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை. பார்த்தசாரதி கோயில் தெரு. ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600032. 9677152265,044-22252081/22252082" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications