வாரக் கடைசியும் வருது..மகாளய அமாவாசையும் வருது! பஸ்ஸில் கூட்டம் அள்ளுமே! கவலை வேண்டாம்.. குட் நியூஸ்
சென்னை: வார இறுதி நாட்கள் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், இந்த வசதியினைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அரசுப் போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து வார இறுதி நாட்களில் பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இதனால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படும்.
மேலும், வார இறுதி நாட்களில் ரயில் பயணிகளுக்குப் போதிய டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில், வார இறுதி நாட்களில் தமிழ்நாடு அரசு மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சிறப்பு பேருந்து சேவை
இந்த நிலையில், இந்த வாரம் வார இறுதி நாட்கள் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது. இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில், "19/09/2025 (வெள்ளிக்கிழமை), 20/09/2025 (சனிக்கிழமை) மற்றும் 21/09/2025 (ஞாயிற்றுக்கிழமை மகாளய அமாவாசை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாளய அமாவாசை
இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளன. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 19/09/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 355 பேருந்துகளும், 20/09/2025 (சனிக்கிழமை) அன்று 350 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
தமிழக அரசு பேருந்து
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 19/09/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 55 பேருந்துகளும், 20/09/2025 (சனிக்கிழமை) அன்று 55 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. மேற்கூறிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்புப் பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. மாதவரத்திலிருந்து 19/09/2025 மற்றும் 20/09/2025 ஆகிய நாட்களில் 20 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
சிறப்புப் பேருந்துகள்
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 4,763 பயணிகளும் சனிக்கிழமை 2,058 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 5,219 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
முன்பதிவு
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூரப் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்புப் பேருந்து இயக்கத்தினைக் கண்காணிக்க அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினைப் பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளுமாறு இதன்மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications