டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு.. 11608 பேர் மீது பதிவான வழக்குகள் வாபஸ்! சொன்னபடி செய்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற்றுள்ளது தமிழ்நாடு அரசு.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி பகுதியில் 2015 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான குத்தகைக்கு மத்திய அரசு ஏல அறிவிப்பை வெளியிட்டது. இந்த டெண்டர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தாவின் துணைக் குழுமமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

இதற்கு மதுரை அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மேலும் இந்த போராட்டங்களுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. தொடர்ந்து தமிழக சட்டமன்றத்தில் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே ஜனவரி 7 ஆம் தேதி மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியிலிருந்து சுமார் 15 கி.மீ நடைபயணமாக மதுரை வந்த போராட்டக் குழுவினர் தல்லாகுளம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் தன்னெழுச்சியாக நடைபெற்று தமிழகம் முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், மக்களின் எதிர்ப்பை அடுத்து டங்ஸ்டன் சுரங்க ஏல அனுமதியை முழுவதுமாக ரத்து செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு மூலம் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை 3 மாதங்கள் நீடித்த தொடர் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
முன்னதாக, மதுரையில் நடந்த டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, அனுமதி கட்டுப்பாடுகளை மீறி நடைபயண பேரணி மேற்கொண்டதாக, மதுரை தல்லாகுளம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள அரிட்டாப்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமையை ஒன்றிய அரசு வழங்கியதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று உறுதி அளித்து.
இந்த திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும் இந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று ஒருமனதாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 09.12.2024 அன்று ஒரு சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மக்களின் உணர்வுக்கும் தமிழ்நாடு அரசின் உறுதிக்கும் கிடைத்த வெற்றியாக இந்த திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications