'தமிழ்நாட்டு மக்கள்' நலன் வேண்டி காஞ்சிபுரம் சங்கரமடத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பூஜை!
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காஞ்சிபுரம் சென்று காஞ்சி காமகோடி பீடத்தில் நடைபெற்ற பூஜையில் மனைவியுடன் பங்கேற்றார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மனைவி லக்ஷ்மியுடன் நேற்று காஞ்சிபுரம் சென்றார். காஞ்சிபுரத்தில் கோவில் தரிசனம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

ஆளுநர் ரவி மற்றும் லக்ஷ்மி ரவி, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தில் நடந்த பூஜையில் பங்கேற்று தமிழ்நாட்டு மக்கள் நலம் பெற வேண்டிக் கொண்டனர்.

ஆளுநர் ரவி மற்றும் லக்ஷ்மி ரவி, காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் சிவபெருமானை தரிசனம் செய்தனர்.

ஆளுநர் ரவி மற்றும் லக்ஷ்மி ரவி, காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயிலில் அனைவருக்கும் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்க வேண்டிக் கொண்டனர்.

ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன தர்மத்தைப் பரப்ப வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: மாணவர்களும் ஆசிரியர்களும், சனாதன தர்மத்தைப் பரப்புவதில் காஞ்சி மடத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பற்றி எப்போதும் விழிப்புடன் இருந்து தேசத்தை கட்டியெழுப்பவும், அமிர்தகாலத்தில் விஸ்வகுரு பாரதத்தை உருவாக்கவும் தங்களையே அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்.
சனாதன தர்மம் நித்தியமானது, அனைத்தையும் உள்ளடக்கியது மற்றும் பாரதத்தின் ஆன்மா. தேசத்தின் எதிரிகள் அதை ஒழிக்க முயல்கின்றனர். மீண்டும் ஒருமுறை பாரதத்தை உடைப்பதே அவர்களின் மறைமுக செயல்திட்டம். ஜி20 தலைவர்களின் உச்சிமாநாட்டில் சனாதன தர்மத்தின் முக்கிய சாரமான வசுதைவ குடும்பகத்தை உலகமே ஏற்றுக்கொண்டது. இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
காஞ்சிபுரத்துக்கு நேற்று காலை வருகை தந்த ஆளுநர் முதலில் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் மாலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். அங்கு ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலய சிறப்புகள்
ஆளுநரிடம் விளக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கபப்ட்டது. சிறப்பு அர்ச்சனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து காஞ்சி சங்கர மடம் சென்று தீபாரதனையில் ஆளுநர் ஆர்.என்.ரவி. பங்கேற்றார்.











Click it and Unblock the Notifications