வரம்பு மீறிய செயல்.. ஆளுநரின் கடமை என்ன தெரியுமா? திமுக எம்.பி திருச்சி சிவா பரபர
சென்னை: ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால், அதற்கு நிராகரிப்பதாக பொருள் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய நிலையில், மசோதாக்களை அப்படியாக ஆளுநர்களால் வைத்துக்கொள்ள முடியாது. அப்படியானால் அவர்கள் நிராகரிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலம் தான் எந்த ஒரு மசோதாவையும் ஆளுநர் கையெழுத்திடாமல் வைத்திருக்கலாம் என்று திருச்சி சிவா எம்.பி தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே சில விவகாரங்களாக கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகிறது. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, ஆன்லைன் ரம்மி தடை மசோதா உள்ளிட்ட பல மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
குறிப்பாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் சட்டமன்றத்தில் ஏகமனதாக சட்டம் இயற்றி ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. அதேபோல், தமிழக அரசு அனுப்பிய மேலும் மசோதாக்களின் முடிவு என்னவென்றே தெரியாத நிலை நீடித்து வருகிறது.

சில பத்திகளை வாசிக்காமல் விட்டது
இது ஒருபக்கம் இருக்க, நடப்பு ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மரபுப்படி உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ அரசு கொடுத்த உரையில் சில பத்திகளை வாசிக்காமல் விட்டது.. அதன் நீட்சியாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது என ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளை அதிகரித்தது. எனினும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. முதல்வர் மு.க ஸ்டாலின் கூட இது தொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், இந்திய குடிமைப் பணி தேர்வுகளுக்காக தயாராகும் மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார்.
ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்பு
அப்போது ஆர்.என்.ரவி கூறுகையில், "சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆளுநர் நிலுவையில் வைத்தால் அதற்கு நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள். உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வே நிலுவையில் வைப்பது நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள் என்று தெரிவிக்கிறது. பொதுப்பட்டியலில் உள்ளவைக்கு மத்திய அரசு சட்டம் இயற்றவில்லை என்றாலும் மாநில அரசு சட்டம் இயற்றலாம். ஆனால் மாநில அரசின் அந்த சட்டம் மத்திய அரசின் சட்டத்துடன் பொருந்தும் வகையில் இருக்க வேண்டும். பேரவையின் தீர்மானம் அரசியல் அமைப்பின் விதிக்கு உட்பட்டு இருக்கிறதா என்று கண்காணிக்க வேண்டும்" என்றார். தமிழக ஆளுநரின் கருத்துக்கு ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக திமுக எம்.பி திருச்சி சிவா கூறுகையில், மசோதாக்களை அப்படியாக ஆளுநர்களால் வைத்துக்கொள்ள முடியாது.

மக்கள் விரோத சட்டங்களை இயற்றாது
அப்படியானால் அவர்கள் நிராகரிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலம் தான் எந்த ஒரு மசோதாவையும் ஆளுநர் கையெழுத்திடாமல் வைத்திருக்கலாம். பின்னர் மறுக்கிறேன் என்று சொல்ல வேண்டும். அப்படி சொல்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இதற்கு முன் பெருமளவிற்கு யாரும்.. எப்போதோ நடந்திருக்கலாமே தவிர இது போன்ற உதாரணங்கள் இல்லை. காரணம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்கள் விரோத சட்டங்களை இயற்றாது. அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றவாறு அவர்கள் சட்டம் இயற்றுகிற போது அங்கே ஆளுநராக பொறுப்பில் இருப்பவர்கள் அதற்கு இசைவு தருவதுதான் அவர்களுடைய கடமை. மாறாக அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் தலையிடுவது.. சட்டமன்றத்தின் மாண்பை மீறுவது போல செயல்படுவது என்பதெல்லாம் அவரது வரம்புகளுக்கு மீறியது என்பதுதான் எல்லோரும் கருதும் ஒன்றாக உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications