சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சூப்பர் பிளான்.. இந்த 3 இடங்களில் வரும் புதிய மேம்பாலங்கள்
சென்னை: தலைநகர் சென்னையில் அதிகரித்து வரும் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் 3 புதிய மேம்பாலங்களைக் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது தினசரி அதிகரித்து வரும் முக்கிய பிரச்சினையாகவே உள்ளது. இதனால் முக்கிய நேரங்களில் வெறும் சில கிலோமீட்டர் செல்லவே நீண்ட நேரம் ஆகிறது.
நகரிலுள்ள முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் 3 புதிய பாலங்கள்
குறிப்பாகப் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. தற்போது புதிதாக மூன்று இடங்களில் மேம்பாலம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2021-22ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டிலேயே, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது பிறப்பித்துள்ளது. மொத்தம் 335 கோடி ரூபாய் செலவில் இந்த மேம்பாலங்கள் அமையவுள்ளன.

முதல் பாலம்
முதலாவது மேம்பாலம் வியாசர்பாடி கணேசபுரம் அருகே ரூ. 142 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது. கணேசபுரம் சுரங்கப்பாதை, வடசென்னை வியாசர்பாடி பகுதியில் மிகவும் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியாக உள்ளது. தற்போதைய சுரங்கப்பாதை மையத்தடுப்பு இல்லாத இருவழிப் பாதையாக உள்ளது. இந்த சுரங்கப்பாதையின் மேல் அமைக்கப்பட உள்ள, புதிய மேம்பாலம், 142 கோடி ரூபாய் மதிப்பில், 680 மீட்டர் நீளம், 15.20 மீட்டர் அகலத்தில், இருபுறமும் பயணிக்கும், நான்கு வழிப்பாதையாக அமைக்கப்பட உள்ளது.

இரண்டாவது மேம்பாலம்
இரண்டாவது மேம்பாலம் கொன்னூர் நெடுஞ்சாலை - ஸ்ட்ராஹன்ஸ் சாலையில் சுமார் 62 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது. கொன்னூர் நெடுஞ்சாலை - ஸ்ட்ராஹன்ஸ் சாலை - குக்ஸ் சாலை - பிரிக்ளின் சாலை சந்திப்பானது, ஓட்டேரி நல்லா கால்வாய் பாலத்தில் சந்திக்கிறது. கொன்னூர் நெடுஞ்சாலை வில்லிவாக்கத்தை இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்த சந்திப்பில், கொன்னூர் நெடுஞ்சாலை - ஸ்ட்ராஹன்ஸ் சாலையை இணைக்கும் வகையில், இருபுறமும் பயணிக்கும் இருவழிப்பாதை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த மேம்பாலம், 62 கோடி ரூபாய் செலவில், 508 மீட்டர் நீளம், 8.4 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ளது.
Recommended Video

தெற்கு உஸ்மான் சாலை
மூன்றாவது சுரங்கபாதை தெற்கு உஸ்மான் சாலையில் 131 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ளது. தியாகராய நகர் தெற்கு உஸ்மான் சாலை - சி.ஐ.டி., நகர் முதல் பிரதான சாலை இடையே, 131 கோடி ரூபாய் செலவில், 120 மீட்டர் நீளத்துக்கு, 8.4 மீட்டர் அகலத்தில் புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த 3 மேம்பாலம் கட்ட, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. மொத்தம் 335 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த மேம்பாலத்தின் பணிகள் விரைந்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications