தமிழக வக்பு வாரியத்துக்கு விரைவில் தலைவர்... இஸ்லாமியர்கள் மனம் குளிரும் அறிவிப்புகள்
Recommended Video
சென்னை: தமிழக வக்பு வாரியத்துக்கு பல மாதங்களாக தலைவர் இல்லாமல் இருந்துவருவதால், புதிய தலைவரை நியமிப்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
குடியுரிமை சட்டம் விவகாரத்தில் ஏற்கனவே இஸ்லாமியர்கள் அதிமுக அரசு மீது அதிருப்தியில் உள்ளதாக கருதப்படும் நிலையில், அவர்களின் மனம் குளிரும் அறிவிப்புகளை முதல்வர் வெளியிட திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் அதன் முதற்கட்டமாக, ஹஜ் பயணிகள் தங்குவதற்காக சென்னையில் ரூ.15 கோடியில் தங்கும் இல்லம் அமைக்கப்படும், உலமாக்களின் ஓய்வூதியம் ரூ.1500 லிருந்து ரூ.3,000 ஆக அதிகரிக்கப்படும், உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க 50 % மானியம் வழங்கப்படும் என ஏராளமான அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளார்.

குடியுரிமை சட்டத்தை கண்டித்தும், தமிழக அரசை விமர்சித்தும் போராட்டம் நடத்திவிட்டு இல்லத்திற்கு சென்ற இஸ்லாமியர்களுக்கு தொலைக்காட்சியில் முதல்வரின் அறிவிப்பை பார்த்து திகைப்பு ஏற்பட்டது. நாயகன் படத்தில் வரும் நீங்கள் நல்லவரா..கெட்டவரா என்ற வசனம் தான் அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. சி ஏ ஏ எதிர்ப்பு போராட்டத்தை முதல்வர் கொச்சைப்படுத்தி விட்டதாக கூறப்பட்ட நிலையில், இஸ்லாமிய மக்களின் மனதை கவரும் வகையில் இன்று அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை உள்ளடக்கிய வக்பு வாரியத்துக்கு தலைவரை நியமிக்கக் கோரி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. முகமது அபூபக்கர் நேற்று கூட சட்டப்பேரவையில் முதல்வரை வலியுறுத்தினார். ஏற்கனவே இது தொடர்பான கோரிக்கையை அதிமுகவில் உள்ள சிறுபான்மை பிரிவு நிர்வாகிகளே முதல்வரிடம் தெரிவித்திருந்தனர். இதனிடையே மீண்டும் முகமது ஜான் எம்.பி.யை வக்பு வாரியத் தலைவராக நியமிப்பது பற்றி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.ஆகியோர் தீவிர ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்தோ அல்லது அதற்குள்ளோ இது தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications