செப்.15-க்கு பின் கல்லூரி இறுதிப் பருவ செமஸ்டர் தேர்வு- நேரில் எழுத வேண்டும்: அமைச்சர் அன்பழகன்
சென்னை: தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான இறுதிப் பருவ செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் 15-ந் தேதிக்குப் பின்னர் நடைபெறும் என்றும் மாணவர்கள் நேரில் வந்து தேர்வு எழுத வேண்டும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. 10-ம் வகுப்பு தேர்வுகள் எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இதேபோல் அரியர்ஸ் தேர்வுக்கு பணம் கட்டியிருந்த மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவிட்டன. இந்த நிலையில் கல்லூரி மாணவர்களின் இறுதிப் பருவ செமஸ்டர் தேர்வு குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:
உயர் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைக் கழகங்களின் கட்டுப்பாட்டில் பயிலும் மாணாக்கர்கள் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் ஆகியோர்களுக்கான இறுதி பருவத் தேர்வு செப்டம்பர் 15-க்குப் பின் நடத்தப்பட உள்ளது. இதற்கான விரிவான தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் விரைவில் வெளியிடப்படும். மேற்படி இறுதி ஆண்டு தேர்வுகள் மாணாக்கர்கள், நேரில் வந்து எழுதக் கூடிய தேர்வாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மாணாக்கர்கள் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் B Arch எனப்படும் கட்டிட அமைப்பியல் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 7-ந் தேதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. B.Arch இளநிலை பட்டப் படிப்புக்கு சேர விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 7-ந் தேதி முதல் https://www.tneaonline.org என்ற இணையதளத்தில் தங்கள் பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications