சென்னை அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை.. கருணாநிதி பிறந்த நாள், அரசு விழா: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை சென்னை அண்ணாசாலையில் மீண்டும் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் சாதனைகளைப் பட்டியலிட்டார். மேலும் கருணாநிதியை சிறப்பிக்கும் வகையில் சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் தோட்டத்தில் அவரது சிலை அமைக்கப்படும். கருணாநிதியின் பிறந்த தினம் ஜூன் 3-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும். அன்றைய தினம் கருணாநிதியின் சிலை திறந்து வைக்கப்படும் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

60 ஆண்டுகால எம்.எல்.ஏ.
தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னை கடலில் தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம். கவிழ்ந்துவிடமாட்டேன். தமிழர்களே! தமிழர்களே! என்னை நீங்கள் நெருப்பில் தூக்கிப் போட்டாலும் அதில் நான் விறகாகத்தான் வீழ்வேன். அடுப்பெரித்து நீங்கள் சமைத்து சாப்பிடலாம். தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னை பாறையில் மோதினாலும் சிதறு தேங்காயாகத்தான் உடைவேன்.. நீங்கள் என்னை எடுத்து தின்று மகிழலாம் என்கிற வைர வரிகளுக்கு சொந்தக்காரர் மட்டுமல்ல. தம்முடைய வாழ்க்கையையும் அப்படியே வாழ்ந்து காட்டியவர் கருணாநிதி. நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் உண்டென்றால் கருணாநிதி ஒருவர்தான். 1957 முதல் 2016-ம் ஆண்டு வரை நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் வென்றவர் அவர் மட்டும்தான். 13 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து 60 ஆண்டுகள் இந்த சட்டசபையின் உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி. 1984-ல் சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார். தமிழகத்தை 5 முறை ஆண்டவர் கருணாநிதி. மொத்தம் 19 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் கருணாநிதி.

நவீன தமிழகத்தை உருவாக்கியவர்
5 முறை ஆட்சியில் இருந்தபோது கருணாநிதி உருவாக்கியதுதான் நம் கண்ணுக்கு முன்னாள் இருக்கும் நவீன தமிழகம். தமிழ் மொழிக்கு செம்மொழித் தகுதி, மத்திய அரசு பணிகளில் ஓபிசிக்கு இடஒதுக்கீடு உயர்வு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டம், மகளிருக்கும் சொத்தில் பங்கு உண்டு, சமூக நீதி உரிமைகள், உழவருக்கு இலவச மின்சாரம், கூட்டுறவு வங்கிகளில் ரூ7,000 கோடி கடன் தள்ளுபடி, சென்னை தரமணியில் டைடல் பார்க், சென்னை மெட்ரோ ரயில் திட்டம், சிப்காட், சிட்கோ தொழில் வளாகங்கள் என எண்ணற்ற திட்டங்களை கொடுத்தவர் கருணாநிதி.

தலைவர்களோடு தலைவராக
தலைவர்களோடு தலைவராக வாழ்ந்தவர் கருணாநிதி. பெரியார், அண்ணா, ராஜாஜி, காமராஜர், காயிதேமில்லத், பாரதிதாசன், கி.ஆ.பெ., எம்ஜிஆர், கண்ணதாசன், குன்றக்குடி அடிகளார் என தலைவர்களோடு தலைவராக வாழ்ந்தார் கருணாநிதி. பரந்து விரிந்த இந்திய அரசியலுக்கே வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் கருணாநிதி. இந்திரா காந்தி, சரண்சிங், விபிசிங், தேவகவுடா, குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன்சிங் நீலம் சஞ்சீவ ரெட்டி, ஜெயில்சிங், விவி கிரி, அப்துல் கலாம் என தலைவர்களால் போற்றப்பட்டவர் கருணாநிதி. நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக எம்.பியாக இல்லாத கருணாநிதி மறைவுக்காக இரு சபைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

கருணாநிதிக்கு சிலை- அரசு விழா
எல்லைகளைத் தாண்டி எல்லோரையும் வசப்படுத்தியவர் கருணாநிதி. படைப்பாளிகளுடன் போட்டியிடும் படைப்பாளி. கவிஞர்களில் தலைசிறந்த கவிச்சக்கரவர்த்தி. மூத்த கலை உலகவாதி. தலைசிறந்த அரசியல் ஆளுமை. நிர்வாகத்தில் நுணுக்கமான திறமைசாலி. மேடையில் வெல்லும் சொல்லுக்கு சொந்தக்காரர் என எல்லாவற்றிலும் முதல்வராக வாழ்ந்தவர் கருணாநிதி. என்னிடம் இருந்து செங்கோலை பறிக்கலாம்- எழுதுகோலைப் பறிக்க முடியாது என்றவர். இத்தகைய மாபெரும் அரசியல் தலைவருக்கு இந்த அரசு தமது வரலாற்று கடமையை செய்ய நினைக்கிறது. கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும். வரும் ஜூன் 3 அன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கம்பீர கருணாநிதியின் சிலை நிறுவப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.,












Click it and Unblock the Notifications