புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தவில்லை- மாநில கல்வி கொள்கைக்கு விரைவில் குழு: அமைச்சர் பொன்முடி
சென்னை: தமிழகத்தின் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தவில்லை; தமிழகத்துக்கான மாநில கல்விக் கொள்கையை உருவாக்க விரைவில் குழு அமைக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக் கழகத்தில் கல்வியாளர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறியதாவது:

சென்னை பல்கலைக்கழகத்தின் தரம் குறைந்தது தொடர்பான காரணங்களை விவாதிப்பதற்காக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. சென்னை பல்கலைக்கழகத்தின் கல்வித் தரத்தை மீண்டும் உயர்த்துவது குறித்து கல்லூரி முதல்வர்கள், துறைகளின் தலைவர்களின் ஆலோசனைகள் கேட்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கும் தமிழக அரசு செயல்படுத்தும் கல்விக் கொள்கைக்கும் தொடர்பு கிடையாது. தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சில திட்டங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருக்கலாம்.மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் ஏராளமான குறைகள் உள்ளன. அதனால்தான் மாநில கல்வித் திட்டம் தேவை என்று வலியுறுத்தி வருகிறோம். மாநிலத்துக்கான தனி கல்விக் கொள்கையை உருவாக்க விரைவில் குழு அமைக்கப்படும்.
இல்லம் தேடி கல்வித் திட்டம் என்பது தமிழக முதல்வரின் திட்டமாகும். அனைத்து நாடுகளிலும் உள்ள நடைமுறைதான். இதற்கும் புதிய கல்வி கொள்கைக்கும் தொடர்பு இல்லை. இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.












Click it and Unblock the Notifications