முதல்வர் ஸ்டாலினின் 'அந்த' அறிவிப்பு.. பேசாமல் எம்எல்ஏவாகி இருக்கலாம்.. கனிமொழி எம்பி பெருமிதம்
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக கனிமொழி கூறினார்.
சென்னை: "சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி மூன்று கோடி ரூபாயை பயன்படுத்தும் உரிமையை சட்டமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கும் முத்தாய்ப்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். இவையெல்லாம் பார்க்கும்போது, சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருக்கலாமோ என்று தோன்றக் கூடிய அளவுக்கு இருக்கிறது" என்று திமுக எம்பி கனிமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணியில், மாநிலங்களவை உறுப்பினராக இருந்த போது ஒதுக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் கட்டப்பட்ட உயர் மின் கோபுர விளக்கை திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்பியுமான கனிமொழி திறந்து வைத்தார்.
பிறகு, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.. இதையடுத்து கனிமொழி அங்கு உரையாற்றினார்.

பெண் பாதுகாப்பு
அப்போது, "இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.. ஆனால் இந்த ஒன்றிய அரசானது, பெண்களின் மாநில உரிமைகளை பறித்து வருகிறது.. விவசாயிகளுக்கு எதிரான சட்டம், நீட் தேர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.. சுற்றுசூழல் அதிகம் பாதிக்கப்படும்போது, இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.. ஒரு நல்ல ஆட்சி நடைபெற்றால் மட்டுமே பெண்களால் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருக்க முடியும்.

திமுக ஆட்சி
கலைஞர் ஆட்சிக்காலத்தில்தான் பெண்களுக்கு கல்வி, சுயஉதவி குழுக்கள், உள்ளாட்சியில் 33 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.. ஒன்றிய அரசு 2 முறை ஆட்சிக்கு வந்தும், இதுவரை பெண்களுக்கான இடஒதுககீடு அதிகம் பெறுவதற்கான சட்டத்தை நிறைவேற்றவில்லை.. பெண்கள் முன்னேற்றத்துக்காக திமுக தவிர வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை..

பெண்கள் நலன்
இப்போது தமிழக முதல்வர் கிராமப்புற பெண்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளார். இதன்காரணமாக ஆண்கள் வீட்டிலிருந்தபடியே பெண்களை வேலைக்கு அனுப்பி வருகின்றனர்.. நிதியே இல்லை என்று சொல்லக் கூடிய நிலையில் மக்களவை உறுப்பினர்களும், மாநிலங்களவை உறுப்பினர்களூம் நின்றுகொண்டிருக்கிறோம்...

நம்பிக்கை
எந்தக் காலகட்டத்தில் மக்களுக்கு நிதி தேவையோ அந்த நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் நிதியை அதிகப்படுத்துவதற்கு பதிலாக நிறுத்தப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசு அதிகாரங்களை எல்லாம் குவித்து வைத்துக் கொண்டு, நாங்களே எல்லா உரிமைகளையும் வைத்திருப்போம் என்று நினைக்கக் கூடிய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. ஒன்றிய அரசாங்கம் கொரோனாவை காரணம் காட்டி எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்துவிட்டது.

3 கோடி ரூபாய்
இந்த நேரத்தில் நம்முடைய முதல்வர் ஸ்டாலின், மக்களின் அடிப்படைத் தேவையை புரிந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி மூன்று கோடி ரூபாயை பயன்படுத்தும் உரிமையை சட்டமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கும் முத்தாய்ப்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இவையெல்லாம் பார்க்கும்போது, சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருக்கலாமோ என்று தோன்றக் கூடிய அளவுக்கு இருக்கிறது.

பிள்ளைகள்
நீட் தேர்வை திணித்து நம் பிள்ளைகளுக்காக கொண்டுவந்த மருத்துவ கல்லூரிகளில் நம் பிள்ளைகள் படிக்க முடியாத நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதையெல்லாம் உடைத்து நம் பிள்ளைகளை மீண்டும் மருத்துவப் படிப்புகளை படிக்க வைப்பதற்காகத்தான்.. நீட் விலக்கு தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதில் முதல்வர் நிச்சயம் வெற்றிபெறுவார்" என்றார்.












Click it and Unblock the Notifications