விசிலடிக்கப்போகும் குக்கர்... தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் உற்சாகத்தில் அமமுக வேட்பாளர்கள்
அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உற்சாகமாக விசிலடிக்க ஆரம்பித்து விட்டனர்.
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. குக்கர் சின்னம் உறுதியாகியுள்ளதால் அமமுக தொண்டர்கள் உற்சாக விசிலடிக்க ஆரம்பித்து விட்டனர்.
மனைவியை ரொம்ப நேசிக்கிறவங்க குக்கரை வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாங்க..! குக்கருக்கு ஓட்டு போடுங்க..!" என சின்னம் கிடைக்கும் முன்பே குக்கரை ஒட்டி வாக்கு சேகரித்தார் மதுரையில் வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடும் வேட்பாளர். அவர் போஸ்டர் ஒட்டியது வீணாகவில்லை. குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியதால் உற்சாகத்தோடு வாக்கு சேகரிக்க ஆரம்பித்து விட்டார்.

தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மொத்தம் 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்காக வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகளுடன் போட்டியிடும் இடங்கள் குறித்து வார்டு பங்கீடு பேச்சுவார்த்தைகள் முடிந்து பல கட்டங்களாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட ஆரம்பித்து விட்டன.
அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டு பிரசாரத்திற்கு தயாராகி வருகிறது. கூட்டணி கட்சியினரும் இரட்டை சின்னத்தில் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி கட்சியினர் அவர்களுக்கு உரிய சின்னத்தில் போட்டியிட உள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய இரண்டு தினங்கள் மட்டுமே உள்ளதால் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சி வேட்பாளர்கள் இன்றைய தினம் அதிக அளவில் வேட்புமனுக்களை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களமிறங்க உள்ளது. அந்த கட்சி வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது மாநில தேர்தல் ஆணையம். அந்த சின்னம் உறுதியாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏற்கனவே அமமுக வேட்பாளர்கள் பலரும் போஸ்டர் அடித்து வாக்கு சேகரிக்க ஆரம்பித்து விட்டனர்.
மதுரை மாநகராட்சியின் மாமன்ற பதவிக்காக 61வது வார்டின் வேட்பாளராக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளர் பாத்திமா பீவி, மனைவியை ரொம்ப நேசிக்கிறவங்க குக்கரை வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாங்க. So குக்கருக்கு ஓட்டு போடுங்க" என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டர்களை 61வது வார்டு முழுவதும் ஒட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். குக்கர் சின்னம் உறுதியாகியுள்ளதால் அமமுக தொண்டர்கள் உற்சாக விசிலடிக்க ஆரம்பித்து விட்டனர்.












Click it and Unblock the Notifications