75 வயதுக்கு மேல் பாஜகவில் பதவி பறிப்பா? அப்ப மோடியின் கியாரண்டி பொய்யா?
சென்னை: 75 வயதுக்கு மேல் பாஜகவில் உயர்பதவி வகிக்க முடியாது என்று கெஜ்ரிவால் முன்வைத்த சர்ச்சை வடநாட்டு அரசியலில் பற்றி எரிந்துவருகிறது.
திகார் ஜெயிலில் இருந்து வெளியே வந்த அடுத்த நொடியே பாஜக கூடாரத்திற்குள் ஒரு புயலைக் கிளப்பி இருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அவர் எழுப்பிய ஒரே ஒரு கேள்வி பாஜவின் ஒட்டுமொத்த பிரச்சாரத்தையே திசை திருப்பியுள்ளது.

அப்படி என்ன கேட்டார் கெஜ்ரிவால்?
பாஜகவின் விதிமுறைப்படி, 75 வயதுக்கு மேல் யாரும் அதிகாரம் செலுத்தக் கூடிய ஆட்சிப் பொறுப்பை வகிக்க முடியாது. கட்சியின் தலைவராக இருந்தால், 75 வயதுக்கு மேல் அவர் ஓய்வு பெற்றுவிடுவார். ஆட்சி அதிகாரத்திலிருந்தாலும் 75 வயதுக்கு மேல் ஒருவருக்கு ஓய்வு வழங்கப்படும் என்பது பல நாள்களாகச் சொல்லப்பட்டு வந்த வாதம்.
அதையொட்டிதான் கெஜ்ரிவால், 'மோடிக்கு இப்போது 73 வயது ஆகிறது. ஆகவே அவர் 2 ஆண்டுகள் மட்டும்தான் பிரதமராக இருப்பாரா? அவருக்குப் பின்னர் பாஜகவின் பிரதமர் யார்?' என்று கேள்வி எழுப்பினார். அந்த ஒரு கேள்விதான் இப்போது நாடு முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சில நாள்கள் முன்பு வரை 'இந்தியா' கூட்டணியின் பிரதமர் யார்? காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளுக்கு 5 பிரதமர்களை நாடு சந்திக்க நேரிடும் என்று எல்லாம் பாஜக பேசி வந்தது.
இப்போது மோடியே 2 வருடங்கள்தான் பிரதமர் நாற்காலியில் உட்கார முடியும். உங்கள் கட்சியின் சட்டம் அதைத்தானே சொல்கிறது என்ற சந்தேகத்தை கெஜ்ரிவால் கிளப்பிவிட்டதுதான் தாமதம், அதை எதிர்க்கட்சியினர் பலரும் பிடித்துக் கொண்டுவிட்டனர்.

இந்த விசயம் இப்போது பாஜகவுக்கு நெருக்கடியாக மாறியுள்ளது.
கெஜ்ரிவால் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாகக் கடந்த சனிக்கிழமையன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு விளக்கத்தை வெளியிட்டிருந்தார்.
அதாவது, "75 வயதை எட்டியது தீவிர அரசியலிலிருந்து மோடி ஓய்வு பெற மாட்டார். 2019 தேர்தலில் 75 வயதைக் கடந்தவர்கள் யாரையும் பாஜக வலுக்கட்டாயமாகத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று தடுக்கவே இல்லை" என்று கூறியிருந்தார்.
மேலும், "பாஜகவின் விதிமுறையில் அப்படி எந்த ஷரத்துகளும் இல்லை. மோடிஜி 2029வரை நாட்டை வழிநடத்துவார். வரும் தேர்தலையும் வழிநடத்துவார்" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பாஜகவின் தலைவர் ஜேபி நட்டார், "பாரதிய ஜனதா கட்சியின் விதிமுறைகளில் வயது குறித்து ஒரு விதியும் சொல்லப்படவில்லை. மோடிதான் எங்கள் தலைவர். அவர்தான் கட்சி மற்றும் ஆட்சியை வழிநடத்துவார்" என்று பேசியுள்ளார்.
ஆனால் இந்த விசயத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. குஜராத் முதல்வராக இருந்த ஆனந்திபென் படேல் 75 வயதை எட்டியபோது 2016 ஆம் ஆண்டு அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதற்கு முன்னதாக 2019 தேர்தல் பிரச்சார களத்தில் பேட்டி அளிக்கும் போது அமித்ஷா, "75 வயதுக்கு மேல் யாருக்கும் சீட்டு வழங்கப்படவில்லை. இது கட்சியின் முடிவு" என்று கூறியிருந்தார். அதனைச் சுட்டிக்காட்டி இப்போது காங்கிரஸ் கேள்வி எழுப்பி வருகின்றது.
எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், யஷ்வந்த் சின்ஹா போன்ற பாஜக மூத்த தலைவர்கள் வயது வரம்பைக் காரணம் காட்டியே ஓரங்கட்டப்பட்டனர். ஆனால், இப்போது அதே விதி மோடிக்குப் பொருந்தாது என வாதிட்டு வருகிறது பாஜக.
இந்தத் தேர்தலில் பாஜவின் தேர்தல் பிரச்சாரமே, 'மோடியின் கியாரண்டி' என்பதுதான். அப்படிப் பார்த்தால் பாதியிலேயே அவர் விடைபெற வேண்டி நிலை வந்தால், மோடியின் உத்தரவாதத்தை யார் நிறைவேற்றுவார்கள்? அமித்ஷாவா? அல்லது யோகி ஆதித்யநாத்தா? இதுதான் கெஜ்ரிவால் கேட்கும் கேள்வி.
அதற்குத்தான் இத்தனை களேபரம். இந்த விவகாரம் குறித்து பாஜகவைச் சேர்ந்த ஆசிர்வாதம் ஆச்சாரி என்ன விளக்கத்தைத் தரப் போகிறார்?
"பாரதிய ஜனதா கட்சியின் விதிமுறைகளில் எங்கேயும் 75 வயதுவரை தான் பதவியில் நீடிக்கலாம் என்று குறிப்பிடவே இல்லை. அப்படி ஒரு ஷரத்து கட்சி விதிமுறையில் இல்லை என்பதைத்தான் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஆனால், சில பாஜக தலைவர்கள் 75 வயதுக்குப் பிறகு தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று தானாகவே முன்வந்து அந்த முடிவை அறிவித்திருக்கிறார்கள். அதைக் கட்சியும் ஏற்றுக்கொண்டுள்ளது. அவ்வளவுதான்.
அப்படிப் பார்த்தால், நஜ்மா ஹெப்துல்லா இதுபோல ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதே மாதிரி ஆனந்திபென் படேல், 'எனக்கு 75வயது ஆகிவிட்டது. நான் குஜராத் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை' என்று வீடியோ வெளியிட்டு தனது சொந்த கருத்து பதிவு செய்திருந்தார்.
கடந்த 4 மாதங்கள் முன்பாக நடந்த தேர்தலில்தான் வசுந்தரா ராஜே சிந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்குக் கிட்டத்தட்ட 72 வயது ஆகப் போகிறது. அப்படி என்றால் அவருக்கு ஏன் சீட்டுக் கொடுக்க வேண்டும்?.
எங்களைப் பொறுத்தவரை பாஜகவின் மிகப்பெரிய தலைவர் மோடி. அவர்தான் பிரதமர் என்பதை முன்னிறுத்தித்தான் 2019 தேர்தலைச் சந்தித்தோம். இந்த 2024இல் அவர்தான் பிரதமர் என்பதைக் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேசிய பொதுக்குழுவில் முடிவு செய்து அறிவித்தோம்.
அப்படி உள்ள போது அவரை ஏன் 2 வருடங்களில் பதவியைவிட்டு மாற்ற வேண்டும். ஆகவே, அரவிந்த் கெஜ்ரிவால் இந்த விசயத்தை மடைமாற்றம் செய்யப் பார்க்கிறார்" என்கிறார்












Click it and Unblock the Notifications