292 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெல்லும்! அடுத்து சொல்லும் ஒரு கருத்துக்கணிப்பு!
சென்னை: இந்தியா கூட்டணி ஒட்டுமொத்தமாக 292 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று ஒரு கணிப்பு வெளியாகி உள்ளது.
இந்த மக்களவைத் தேர்தல் பிரச்சார களத்தில் மோடி பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார் என்று காங்கிரஸ் கட்சி மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது.

கூடவே அவர் மதரீதியாக வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும், ஆகவே அவரது பிரச்சாரத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.
இதற்கு ஒருபடி மேல் சென்று காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் மவுனம் காத்து வருவதாக ஒரு தரப்பினர் சாடி வருகின்றனர்.
இதனிடையே மோடி தனது பிரச்சார யுக்தியைக் காங்கிரசுக்கு எதிராகவும் சிறுபான்மையினருக்கு எதிராகவும் மாற்றி அமைத்துள்ளார். பாஜகவோ மோடி என்றைக்கும் மதத்தை வைத்து அரசியல் செய்ததே இல்லை என்றும் மறுத்து வருகிறது.
இதனிடையே பாஜக இந்த முறை மிகக் கடுமையான தோல்வியைச் சந்திக்கும் என்றும் இந்தியா கூட்டணி குறைந்தது292 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒரு கணக்குப் போட்டுள்ளார்.

இது குறித்து அவர் ஒரு யூடியூப் தளத்திற்கு மிக விரிவாகப் பேட்டி அளித்துள்ளார். அதில் ப்ரியன், "இந்தியா கூட்டணி பலமாக உள்ள மாநிலங்கள் எவை என்று ஒரு பட்டியல் போட்டுப் பார்ப்போம்.
முதலில் தமிழ்நாடு. அடுத்து பீகார். அப்புறம் உத்தரப்பிரதேசம், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா. இந்த ஒட்டுமொத்த மாநிலங்களிலும் 240 சீட்டுகள் உள்ளன.
இந்தப் பட்டியலில் உள்ள குஜராத்தில் இந்த முறை பாஜக 5 தொகுதிகள் வரை இழக்கும் என்று கணிப்புகள் சொல்கின்றன. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிதான் வெற்றிபெறும். அது உறுதி.
பீகாரில் உள்ள 40 சீட்டுகளில் பாஜக 20 சீட்டுகள் வரலாம். மீது உள்ள 20 தொகுதிகளில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான இந்தியா கூட்டணிதான் வெல்லும்.
அதைப்போல உபியில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான இந்தியா கூட்டணி 20 முதல் 25 தொகுதிகளில் வெற்றிபெறுவார்கள். டெல்லியில் இந்தியா கூட்டணி 4 இடங்களில் கட்டாயம் வெற்றிபெறும்.
மகாராஷ்டிராவில் உள்ள 48 இடங்களில் பாஜகவுக்குப் பலமான போட்டி உள்ளது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கடுமையான போட்டியைக் கொடுத்து வருகிறது.

ஆகவே, அங்கே இந்தியா கூட்டணி பாதி இடங்களைக் கைப்பற்றும். அதுவும் பாஜகவுக்குப் பின்னடைவுதான்.
ஆக, மொத்தமாக உள்ள 240 தொகுதிகளில் எப்படிக் குறைத்து மதிப்பிட்டாலும் 100 சீட்டுகளை இந்தியா கூட்டணி கைப்பற்றும். அதற்கான வாய்ப்புகள் அதிகம் தெரிகின்றன.
அடுத்து பஞ்சாபில் 13 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 42, கேரளாவில் 20. இந்த மூன்று மாநிலங்களில் உள்ள மொத்த தொகுதிகள் 75. இதில் கூட குறைவாகக் கணக்கிட்டால் கூட காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சியும் திரிணாமுல் காங்கிரசும் சேர்த்துப் பார்த்தால் சுமார் 55 தொகுதிகளைக் கைப்பற்றிவிடும்.
முன்பு 100 தொகுதிகள் சொன்னேன். அடுத்து 55 தொகுதிகள். இரண்டையும் சேர்த்தால் 155 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றுகிறது.
ம.பியில் 29 தொகுதிகள், ராஜஸ்தான் 25, சத்தீஸ்கர் 11, ஹரியானா 10, உத்தரகண்ட் 5, ஜார்கண்ட் 14. இதில் ஜார்கண்ட்டில் ஹேமந்த் சோரனைக் கைது செய்தது முதல், பாஜகவுக்கு எதிரான அலை வீசி வருகிறது. ம.பியில் பாஜக பலமாக உள்ளது. ஆனாலும் காங்கிரஸ் அங்கே 4 சீட்டுகளையாவது பிடிக்கும்.
அடுத்து ராஜஸ்தானின் ராஜ்புத் மற்றும் ஜாட் இன மக்கள் பாஜகவுக்கு எதிராகத் திரும்பி உள்ளனர். அவர்கள் கடுங்கோபத்தில் உள்ளனர். முழுத் தேர்தலும் இங்கே முடிந்துவிட்டது. காங்கிரஸ் அங்கே 18 இடங்களில் வெற்றி பெற்றும் என்று தேர்தலுக்கு பிறகான கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
ஹரியானாவில் பாஜக வேட்பாளர்கள் தொகுதிக்குள் போகவே முடியவில்லை. மக்கள் அடித்து விரட்டி வருகின்றனர். ஆகவே 7 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்பது கணிப்பு. உத்தரகண்ட்டில் உள்ள 5 தொகுதியில் 4 பாஜக பிடிக்கும்.
இந்த ஒட்டு மொத்த மாநிலங்களையும் சேர்த்தால் 94 தொகுதிகள் உள்ளன. அதில் மிகக் குறைத்து மதிப்பிட்டால் கூட 25 இடங்களில் இந்தியா கூட்டணி வெல்லும்.
அப்படியே தெற்குப் பக்கம் வருவோம். கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆதரவு உள்ளது. அங்கே கூட 12 இடங்கள் மேல் பாஜக வெற்றி பெறாது. ஆந்திராவில் கூட்டணி அமைத்து 6 இடங்களில் பாஜக நிற்கிறது. அதில் 2 இடங்களில் தான் வெல்லும். தெலுங்கானாவில் 17 இடங்கள். அங்குப் போன முறை 4 இடங்களில் பாஜக வென்றது. இந்த முறை கூடுதலாக 2 இடங்களில் பாஜக வெல்லலாம்.
கேரளாவில் 1 தொகுதியை பாஜக கைப்பற்றும்.
இந்த மாநிலங்களில் ஒட்டு மொத்தமாகக் கூட்டினால் 130 தொகுதிகள் வருகின்றன. அதில் 90 இடங்களை இந்தியா கூட்டணி எப்படிப் பார்த்தாலும் வென்றுவிடும்.
மிசோரம், மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் 4 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்ல வாய்ப்பு உள்ளது. அசாமில் 14 தொகுதிகள். அதில் 3 காங்கிரஸுக்குக் கிடைக்கும். லட்சத்தீவு 1, கோவா 2, அந்தமான் 1 என மொத்தம் 4 தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு இடம் காங். வெற்றி பெறும்.
காஷ்மீர் வருவோம். அங்கே 6 தொகுதிகள் உள்ளன. அதில் 3 இந்தியா கூட்டணிக்குத்தான். ஆக, இவை அனைத்தையும் கூட்டினால் 292 தொகுதிகளைக் காங்கிரஸ் கைப்பற்றும். அதில் 10 குறைத்து மதிப்பிட்டால் கூட 282 சீட்டுகளை பெற்று காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி" என்கிறார்












Click it and Unblock the Notifications